காரில் ஏறி அமைச்சர் பொன்முடி எஸ்கேப் | flood relief measures delay | people protest| Villupuram
தமிழகத்தின் வட மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் இருவல்பட்டு கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் தெப்பம் போல் வெள்ளம் தேங்கியது. மூன்று நாளாக மின்சாரம் இல்லாமல் கிராமம் இருளில் தத்தளிக்கிறது. வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை இளைஞர்கள் சிலர் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்டனர். அரசு தரப்பில் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. மழை நின்ற பிறகும் கூட குடிநீர், உணவு உள்ளிட்ட எதுவும் கிடைக்காமல் மூன்று நாட்களாக மக்கள் பட்டினி கிடந்தனர். கடுப்பான மக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக சென்ற அமைச்சர் பொன்முடி பொதுமக்களை சந்தித்து சமரசம் செய்ய நேரில் சென்றார். அவரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த மக்கள் சேரு, சகதியை அமைச்சர், அதிகரிகள், போலீசார் மீது வாரி இரைத்து சாபமிட்டனர். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த அமைச்சர் பொன்முடி உடனடியாக அங்கிருந்து நைசாக நடையை கட்டினார். போலீஸ் புடைசூழ காரில் ஏறி புறப்பட தயாரானார். அவரது காரை இளைஞர்கள் முற்றுகையிட்டு அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுக்க வந்த போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு வழியாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறி எஸ்கேப் ஆனார்.