கோவை மலையடிவாரத்தில் சம்பவம்: வனத்துறை அதிர்ச்சி anamalai tiger reserve 2 elephant death electric
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம், பருத்தியூர் மலையடிவார பகுதியில் வனத்துறையினர் இன்று பிற்பகலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 2 பெண் யானைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த இடத்தில் விவசாய நிலத்துக்கு செல்லும் மின் வழித்தடம் தாழ்வாக சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதியில் இருந்து அடிவாரப் பகுதிக்கு இரை தேடியோ, வழிதவறிய யானையை தேடியோ காட்டு யானைகள் வருவது வழக்கம். அப்படித்தான் இந்த 2 யானைகளும் வந்திருக்கும். வரும் வழியில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் யானையின் உடல் பட்டு மின்சாரம் தாக்கி இறந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் கூறினர். ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்க்கவே தேஜா. பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞானபாலமுருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானைகளை பார்த்தனர். யானைகளுக்கு உடற்கூறாய்வு செய்ய டாக்டர் விஜயராகவன் தலைமையில் மருத்துவ குழுவினரும் வந்தனர். ஆனால் இரவாகிவிட்டதால் நாளை காலை உடற்கூறாய்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்தனர். மின்சாரம் தாக்கி 2 பெண் யானைகள் இறந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.