பாகிஸ்தான் உடைந்து புதிய நாடு? பகீர் பின்னணி | Operation Herof | Baloch Liberation Army | PAK vs BLA
நடுங்க வைக்கும் பயங்கரவாதம் பாகிஸ்தான் நாடு கதறுவது ஏன்? யார் இந்த BLA போராளிகள்? இந்தியாவுக்குள் அடிக்கடி பயங்கரவாதிகளை ஏவி விட்டு சுகம் காணும் பாகிஸ்தான், சொந்த நாட்டை குறி வைத்து அடிக்கும் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க முடியாமல் திணறுகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்கட்கிழமை நடந்த மிகப்பெரிய பங்கரவாத தாக்குதல் மொத்த பாகிஸ்தானையும் உலுக்கியது. பலுசிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக மாறியது. பல இடங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு நடந்தது. கொத்து கொத்தாக மக்கள், வீரர்கள் சுட்டுத்தள்ளப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று கொண்டாட்டத்துடன் சொன்னது பாலோச் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு. பாகிஸ்தானில் இருப்பவர்களே சொந்த நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவது ஏன்? பாலோச் விடுதலை ராணுவம் என்றால் என்ன? உண்மையில் பாகிஸ்தானில் என்ன தான் நடக்கிறது? என்பதை பார்க்கலாம். திங்கள் அன்று பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான்-பஞ்சாப் மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகனங்களை மறித்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முசகேல், கலாட், போலன், குவாதர் என பல இடங்களில் தாக்குதல் நடந்தது. வாகனங்களை மறித்து உள்ளே இருந்த மக்களின் அடையாளத்தை சோதித்தனர். பஞ்சாப், சிந்து மாகாணங்களை சேர்ந்த குறிப்பிட்ட இன மக்களை அங்கேயே குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளினர். லாரி, சரக்கு வேன், பஸ் என 35க்கும் மேற்பட்ட வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். குண்டு வீசி தீக்கிரையாக்கினர். போலன் என்ற இடத்தில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர். மஸ்துங்கில் போலீஸ் நிலையத்தை சூறையாடினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள், வீரர்கள், போலீஸ் என 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கொடூர தாக்குதலுக்கு BLA எனப்படும் பாலோச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டது.