6 மாதங்களில் 86,000 ஏழை மக்களுக்கு பட்டா வழங்க திட்டம் | CM Stalin | Land patta | Poor people | TN M
இன்னும் 2 வாரங்களில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், திங்களன்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் ஒன்றாகத்தான் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு என சொல்லி முதல்வர் ஸ்டாலின் பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் பெல்ட் ஏரியாக்களில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்ட தலைநகர பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரத்து 271 ஏழை மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளோம்! 6 மாதங்களில் இதனை செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்க உள்ளோம்! அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.