ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிர் பலி அதிகரிக்கும் அபாயம் EarthQuack in Afghanistan | Afghanistan
ஆப்கானிஸ்தானின் மசார் - இ - ஷரீப் பகுதியில், இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அதிகாலை 3.30க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், 10 பேர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பூமிக்கு அடியில் 28 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஏற்கனவே, நேற்று 3.9 ரிக்கர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட பூகம்பத்தால், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மசார் - இ - ஷரீப் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதால், பலி, காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் எதிரொலித்ததுடன், அண்டை நாடுகளான தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையோர பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. கடந்த ஆண்டுகளில் நிலநடுக்கத்தால் கடும் சேதங்களை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. மீட்பு, நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.