சென்னை NIA ஸ்பெஷல் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு | ISIS Madurai | Hizb-ut-Tahrir Module
மதுரை புது ராமநாதபுரம் ரோடு விவேகானந்தர் தெருவில் வசித்து வந்தவர் சரவணக்குமார் என்கிற அப்துல்லா. இவர் 2021 பிப்ரவரி 23,25 தேதிகளில் பேஸ்புக்கில் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை தெப்பக்குளம் போலீசார் 2021 ஏப்ரல் 10ல் வழக்கு பதிந்தனர். பிறகு இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. 2021 மே மாதம் சென்னையில் அப்துல்லாவை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டடு புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ ஸ்பெஷல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அப்துல்லா மீது தேசத்துரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்துல்லா பல நாடுகளால் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஹிஸாப் உத் தாஹிர் உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அடிப்படைவாத சித்தாந்தத்தை ஆதரித்து வந்துள்ளார். அதனை பரப்ப பணியாற்றி வந்தார் என என்ஐஏ தெரிவித்துள்ளது. விசாரணை முடிவில் அப்துல்லா குற்றவாளி என்பதை என்ஐஏ கோர்ட் உறுதி செய்தது. அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை, 10 ஆயிரம் அபராதம் விதித்து என்ஐஏ ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். அப்துல்லா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.