அடிவேரோடு பிடுங்கி எறியப்படும் ஹிஸ்புல்லா | Israel Hezbollah conflict
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே நடக்கும் மோதலில் இப்போது ஹிஸ்புல்லாவும் சேர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் நாட்டை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. எல்லை தாண்டி சென்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது ஹிஸ்புல்லாவின் வாடிக்கை. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் பேஜர், வாக்கி-டாக்கிகளை இஸ்ரேல் வெடிக்க செய்தது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சாதனங்கள் வெடித்து சிதறியது. 30க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இஸ்ரேலின் திடீர் தாக்குதலால் ஹிஸ்புல்லா நிலைகுலைந்து போனது. பதிலுக்கு எல்லை தாண்டி சென்று இஸ்ரேலின் விமானப்படை தளத்தை தாக்கியது. ஏற்கனவே இஸ்ரேல் மீது கை வைத்தால் ஹிஸ்புல்லாவை கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது. மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடர்ந்ததால் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அதிகம் உள்ள இடத்தை இஸ்ரேல் தாக்கியது. இதில் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த போவதாக இஸ்ரேல் எச்சரித்தது.