அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு|Jagdeep Dhankhar|Vice president|Puducherry visit
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று புதுச்சேரி வந்தார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதுச்சேரி ஏர்போர்ட்டில் துணை ஜனாதிபதியை சால்வை அணிவித்து, பூங்கொத்து, நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார், எம்.பி., எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளும் ஜகதீப் தன்கரை வரவேற்றனர். கடற்கரை சாலையில் உள்ள கோர்ட் கெஸ்ட் ஹவுசில் தங்கும் அவர், நாளை ஜிப்மரில் நடக்கும் தேசத்தை கட்டியெழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை என்ற தலைப்பிலான கருத்தரங்கில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். 17ம் தேதி புதுச்சேரி பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், நாளை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உரிய ஏற்பாடுகளை செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.