உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை மீனாட்சி கோயில் சொத்து: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு | MeenakshiTemple | HRCE

மதுரை மீனாட்சி கோயில் சொத்து: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு | MeenakshiTemple | HRCE

மீனாட்சி கோயில் சொத்து, வருமானம் அறநிலைய அறிக்கையில் முரண்பாடு! சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழக தலைமை செயலர், அனைத்து துறை தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வழிகாட்டுதல், விதிமுறைகளை வகுக்க வேண்டும் என 2021ல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, தலைமை செயலர் தலைமையில் 2021ல் கூட்டம் நடந்தது. அனைத்து துறை அதிகாரிகளும் அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க தலைமை செயலர் உத்தரவிட்டார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அதன் பிறகு கூட்டம் நடக்கவில்லை. இதனால் கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மாநிலம் முழுதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில், மறு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இதற்குரிய புள்ளிவிபர அறிக்கையை அரசுக்கு அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் ஆஜரான மனுதாரர் ராதாகிருஷ்ணன் வாதத்தை தொடங்கினார். அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர், கோயில் இணை கமிஷனர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் எந்த தகவலும் இல்லை. கோயில் சொத்துக்களுக்குரிய ஆவணங்களை சரியாக பராமரிப்பதில்லை. அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டது. அதற்குரிய வாடகை, 20 லட்சம் ரூபாயை செலுத்தவில்லை. புது கட்டடத்திற்கு வாடகையை நிர்ணயிக்கவில்லை. இது தணிக்கை அறிக்கையில் உள்ளது என பேசினார். இதற்கு பதில் சொன்ன அரசு தரப்பு, எங்கெங்கு ஆக்கிரமிப்பு உள்ளது என மனுதாரர் தெளிவுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கை மேம்போக்காக உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன. அதன் உப கோயில்களின் விபரம், அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? வருவாய் எந்த நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது; சொத்துக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா? இருக்கும் பட்சத்தில் அகற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; சொத்துக்களின் விபரங்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி சரியாக உள்ளனவா என்பது குறித்த தகவல் வேண்டும். அறநிலையத்துறை தரப்பில் அக்டோபர் 7ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி