மாநிலங்களிடம் அறிக்கை கேட்கும் பசுமை தீர்ப்பாயம்! National Green Tribunal | Medical Waste Issue
சுற்றுச்சூழலில் மருந்து, நச்சுத்தன்மையின் தாக்கம் என்ற தலைப்பில், கரன்ட் சயின்ஸ் ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: வளர்ச்சி அதிகரிக்கும் போது, ரசாயன கழிவுகளும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைகின்றன. 43 சதவீத ஆறுகள், மருந்து கழிவுகளால் ஆபத்தை எதிர்கொள்கின்றன. மருத்துவமனைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை விதிகளின்படி அகற்றுவதில்லை. மருத்துவ கழிவுநீரை சுத்திகரிக்காமல், பொது கழிவுநீர் கால்வாயில் விடுகின்றனர். இவை மண் வளத்தையும், நிலத்தடி நீர் வளத்தையும் அபாயமாக மாற்றுகின்றன, என அதில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதிபதி சுதிர் அகர்வால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு கூறப்பட்டுள்ளதாவது: மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதை, இந்த ஆய்வு கட்டுரை எடுத்து காட்டுகிறது. மருந்துகள் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அதன் பாதிப்புகளை குறைக்க, ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.