தத்தளிக்கும் தூங்கா நகரத்தில் தவிக்கும் மக்கள் | Heavy Rain | Madurai | Flood
தத்தளிக்கும் தூங்கா நகரத்தில் தவிக்கும் மக்கள் | Heavy Rain | Madurai | Flood மதுரையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் மூன்றுமாவடி, கோரிப்பாளையம், ஒத்தக்கடை, கே.புதூர், தல்லாகுளம் போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதித்தது. நேற்று இரவு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு, சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் அப்பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியது. மதுரை கலெக்டர் ஆபீஸிலும் மழை நீர் புகுந்தது. தேங்கிய மழை நீரை உறிஞ்சி கலெக்டர் ஆபீசுக்கு பின்புறம் உள்ள காலி இடங்களிலேயே விட்டனர். இதனால் அங்கு மழை நீர் தெப்பக்குளம் போல் காட்சியளிக்கிறது. ஆனையூரில் பெய்த மழையால், அப்பகுதியில் இருக்கும் உழவர் சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்த காய்கறிகள் மழைநீரில் மூழ்கின. விவசாயிகள் காய்கறிகளை சாலையில் விரித்து விற்றனர். இந்திரா நகர் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் அவதியடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடல் நகரிலும் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாத மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். செல்லூர், கட்டபொம்மன் நகர் பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக எம்எல்ஏ தளபதி பார்வையிட வந்தார். அவரை முற்றுகையிட்டு பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் காரில் உடனடியாக திரும்பி சென்றார். ஒரு நாள் மழைக்கே மதுரை வெள்ளக்காடாக மாறி உள்ளது. ஓடைகள், வாய்க்கால்கள், சரியாகத் தூர்வாராமல் ஆழப்படுத்தாததே மழைநீர் தேங்க காரணமாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், பாதிப்புகளுக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.