நியூசிலாந்துக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்த மிட்செல் சான்ட்னர் | India lost 2nd test
நியூசிலாந்துக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்த மிட்செல் சான்ட்னர் | India lost 2nd test | New zeland won series | Mitchell santner | இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் 24ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். அணியின் ஸ்கோர் 50-ஆக உயர்ந்தபோது 30 ரன் எடுத்திருந்த சுப்மன் கில் எல்.பி.டபிள்யூ ஆனார். இதில் இருந்து இந்திய அணியின் வீழ்ச்சி ஆரம்பமானது. ஆடுகளத்தில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாத நிலையில், நன்கு சுழன்று திரும்பியதால், இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் விக்கெட் வேட்டை நடத்தினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 45.3 ஓவரில் 156 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார். 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 53 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இருந்தது. 3-வது நாளாக இன்று தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரான ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. ரோகித் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். கில் தனது பங்குக்கு 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களில் மீண்டும் சான்ட்னெர் பந்துவீச்சில் அவுட் ஆனார். முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் மாயாஜாலம் காட்டிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரான சான்ட்னெர் இந்தியாவின் விக்கெட்டை கொத்தாக கைப்பற்றினார். முடிவில் இந்தியா வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி உள்ளது. இது அந்த அணி இந்திய மண்ணில் கைப்பற்றி இருக்கும் முதல் தொடர். ஆனால் இந்த தோல்வியால் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா கை நழுவ விட்டுள்ளது. கடைசியாக 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருந்தது.