விவாகரத்து பெற உறுதி காட்டும் சினிமா ஜோடி! Danush | Iswarya | Divorce case | Hearing
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் காதலித்து 2004ல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என 2 மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டு கால திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இருவரும் மனமொத்து பிரிவது என முடிவு செய்தனர். சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு இருவரும் மனு செய்தனர். இதற்கிடையில் குழந்தைகளுக்காக இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என இரு தரப்பின் உறவினர்களும் ஆலோசனை தந்தனர். ஆனால் தனுஷும், ஐஸ்வர்யாவும் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்தனர். இரண்டு முறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை. இதனால் இருவரும் ஒன்று சேர வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா போடும் பதிவுகளுக்கு தனுஷ் அண்மையில் லைக் போட்டு வந்தார். இதுவும் அவர்கள் ஒன்று சேரப் போகிறார்கள் என்ற கருத்தை ரசிகர்கள் மத்தியில் விதைத்தது. இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இன்று சென்னை குடும்ப நல கோர்ட்டில் ஆஜராகினர். கோர்ட் கதவுகள் அடைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இருவரிடமும் நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார். விசாரணையில் இருவருமே பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுபாதேவி அறிவித்தார்.