பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு? | TNSTC | Bus fare hike | TN Government
கூடுதல் நிதி சுமையால் பஸ் கட்டணம் உயர்கிறது? எந்த நேரத்திலும் அறிவிப்பு வரலாம்! தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 1.85 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். அரசு பஸ்களை இயக்க தினமும், 17 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய், 39.3 கோடி ரூபாய்; செலவு 57.68 கோடி ரூபாய்; பற்றாக்குறை 18.65 கோடி ரூபாயாக உள்ளது. இதே கட்டணத்தில் தான், தமிழகம் முழுதும் 4,700 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பயணியர் கட்டணத்தை உயர்த்த கோரி தொடர்ந்த வழக்கில், நான்கு மாதங்களுக்குள் முடிவு எடுக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புதிய குழு அமைக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டண உயர்வு குறித்து, 1,000க்கும் மேற்பட்ட பொது மக்கள், நுகார்வோர் அமைப்புகள், தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளன. இதன் அறிக்கை, விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழக தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2018ல், டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. அப்போது, ஒரு லிட்டர் டீசல் விலை, 63 ரூபாய். தற்போது, 92.49 ரூபாயாக உள்ளது. கேரளாவில், ஒரு கி.மீ. துாரத்துக்கு, 1 ரூபாய் 10 காசும், கர்நாடகாவில் 1 ரூபாயும், ஆந்திராவில் 1 ரூபாய் 8 காசும் கட்டணமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு கி.மீ.க்கு 58 காசுகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்ந்து வருவதால், எங்களால் இழப்பை சரி செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே, தமிழகத்தில் ஒரு கி.மீட்டருக்கு, 90 காசுகள் நிர்ணயம் செய்ய வேண்டும் என, கருத்து கேட்பு நிகழ்வில் வலியுறுத்தினோம். என்று அவர்கள் கூறினார். இதனால் கட்டண உயர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.