இளைஞர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்க திமுக முடிவு! Udhayanithi | DMK | Youth wing | 2026 Election
2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து, தேர்தல் பணி மேற்கொள்ள, தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், பிஎல்ஏ எனும் பூத் லெவல் ஏஜன்ட், பிஎல்சி எனும் பூத் லெவல் கமிட்டி ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. இதில் பிஎல்ஏ ஓட்டுச்சாவடிக்கு ஒருவரும், பிஎல்சி 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என செயல்படுவர். இப்பட்டியல் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்படும். இந்நிலையில் இளைஞர் அணி செயலர் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுக தலைமை சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது பூத் கமிட்டியில், பூத் டிஜிட்டல் முகவர் எனும் புது பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணியில், 30 வயதுக்கு கீழ் மற்றும் பட்டதாரியாக உள்ளவர்கள், பி.டி.ஏ. எனும், பூத் டிஜிட்டல் ஏஜன்ட்டாக நியமிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: வரும் தேர்தலில், 18 முதல், 35 வயதுள்ளவர்களின் ஓட்டுகளை தி.மு.க., பெரிய அளவில் பெற வேண்டும் என, உதயநிதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இத்தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்தல், ஓட்டுச்சாவடி, தேர்தல் பணியில் உதயநிதியின் பங்களிப்பு அதிகம் இருக்கும். இளைஞர் அணியினருக்கு, வருவாய் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், 40 சீட் கேட்பதற்கான பணியில், உதயநிதி கவனம் செலுத்துகிறார். தி.மு.க. தலைமையும், எந்த தேர்தலிலும் இல்லாதபடி, பூத் கமிட்டியில் கட்சி சார்பில் இளைஞர் அணியினருக்கு புது பதவியை வழங்கியுள்ளது.