பொது சிவில் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் | Uniform Civil Code | UCC in Uttarakhand
உத்தரகண்ட்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என 2022 தேர்தலின் போது பாஜ வாக்குறுதி அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியும் அமைத்தது. சென்ற ஆண்டு உத்தரகண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது. தொடர்ந்து இன்று உத்தரகண்டில் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு இருக்காது. பட்டியல் பழங்குடியினத்தவரை தவிர அனைத்து மதம் மற்றும் ஜாதிகளை சேர்ந்தவர்களுக்கு, திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை, வாரிசுரிமை உள்ளிட்டவற்றில் சமமான விதிமுறைகளை இந்த சட்டம் உறுதி செய்யும். மற்ற மாநிலங்களில் வசிக்கும் உத்தரகண்ட் மக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அம்சம் இச்சட்டத்தில் உள்ளது. திருமணத்திற்கான ஆணின் வயது 21, பெண்ணிற்கு 18 ஆகவும் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளாமல் லிவ்-இன் உறவில் சேர்ந்து வாழ்வோரும் இனி முறையாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் விட்டாலோ அல்லது தவறான தகவல் சொன்னாலோ 3 மாதம் சிறை அல்லது 25,000 அபராதம் அல்லது இந்த இரண்டுமே விதிக்கப்படும். பதிவு செய்வதில் ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டாலும் கூட, மூன்று மாதங்கள் வரை சிறை, 10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பதிவு செய்யாமல் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பற்றி தகவல் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இடம், தங்க வீடு கொடுப்பவர்கள் கூட இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர். லிவ்-இன் உறவில் இருப்போர் 18 முதல் 21 வயதுக்கு உள்ளவராக இருந்தால் அவர்கள் பெற்றோர் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் அனைவரும் முறையாக கல்லூரி வரை படிக்க முடியும். பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்றவற்றை இந்த சட்டம் தடை செய்கிறது. விவகாரத்து கோருவதிலும் இரு பாலருக்கும் சம உரிமை உண்டு. அதே போல் லிவ் இன் உறவில் பிறக்கும் ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் மற்றவர்களை போல அவர்களது பெற்றோர் சொத்தில் சம உரிமை கிடைக்கும்.