வெள்ளை மாளிகை வெளியிட்ட பரபரப்பு தகவல் | Donald Trump | migrants deported
அமெரிக்க அதிபராக டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். அப்போதே அவர் மெக்சிகோவை ஒட்டியுள்ள நாட்டின் தெற்கு எல்லையில் எமர்ஜென்சி நிலையை அறிவித்தார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள எனிமி ஏலியன் சட்டத்தை பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். எனிமி ஏலியன் சட்டம் என்பது அமெரிக்காவில் வசிக்கும் அந்நிய நாட்டினரை நாடு கடத்தும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்குகிறது. இந்த சட்டத்தின் கீழ் அமெரிக்கா எல்லைகள் மற்றும் கடல், வான்வெளி எல்லை பாதுகாப்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தாமஸ் ஹோமன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஜனவரி 23 வரை 3 நாட்களில் 3 நாட்களில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 538 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ விமானத்தை பயன்படுத்தி பல நூறு பேரை நாடு கடத்தியுள்ளனர். இதில் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், ரவுடிகள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்த குற்றவாளிகள் அடங்குவர். இது வரலாற்றில் மிகப் பெரிய நாடு கடத்தல் நடவடிக்கையாகும். சொன்னபடியே வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என டிரம்ப் கூறியுள்ளார். சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களால் தான் அமெரிக்காவில் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இதனால் அமெரிக்கர்களுக்கு எந்தவொரு வேலையும் கிடைப்பதில்லை. சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தவர்கள் தான் மோசமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும் நாடு கடத்த வேண்டும் என்றார். சொன்னது போலவே அதிபராக பதவி ஏற்ற முதல் நாளே இது தொடர்பான நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதனால் முறையாக விசா பெற்று உரிய காலக்கெடுவில் அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.