அரசு ஊழியர்களுக்கு கெடு விதித்த அதிபர் டிரம்ப் donald trump| federal employee resign offer| Us gov
அமெரிக்க அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி அறிவிப்புகள், நடவடிக்கைள் எடுத்து வருகிறார். இப்போது அமெரிக்க அரசு ஊழியர்கள் 20 லட்சம் பேருக்கு ஒரு ஆஃபரை அறிவித்து இருக்கிறார் அதிபர் டிரம்ப். இது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் இமெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அரசு பணியை ராஜினாமா செய்ய விரும்பும் ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்துடன் செட்டில் செய்யப்படும். ஊழியர்கள் சம்மதம் தெரிவிக்க பிப்ரவரி 6 வரை டிரம்ப் அவகாசம் கெடுத்து இருக்கிறார். அரசு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கவும், அதிபர் டிரம்பின் அரசியல் கொள்கைக்கு ஒத்து வராதவர்களை வெளியேற்றவும் இப்படியொரு ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 5 முதல் 10 சதவீத அரசு ஊழியர்கள் வரை ராஜினாமா வாய்ப்பை பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் செலவு மிச்சமாகும் எனவும் மூத்த அதிகாரி தெரிவிக்கிறார். எப்படியும் வரவிருக்கும் நாட்களில், மறு கட்டமைத்தல், மறு சீரமைப்பு, உள்ளிட்டவை மூலம் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு தரப்பட்டுள்ள விருப்பப்படியான வாய்ப்பு இந்த நடவடிக்கையை எளிதாக்கும் என்று அமெரிக்க பணியாளர் மேலாண்மை துறை தெரிவிக்கிறது. பணியில் தொடரும் அரசு ஊழியர்கள், மேம்பட்ட நன்னடத்தையை கொண்டிருக்க வேண்டும். நம்பகமானவர்கள், விசுவாசமானவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சட்ட விரோத நடவடிக்கை அல்லது பிற தவறான நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் விசாரணை, பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என பணியாளர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.