மோடி-ராகுல் அவசரமாக சந்தித்தது ஏன்? பரபரப்பு தகவல் kashmir pahalgam attack | cbi | modi rahul meet
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனராக இருப்பவர் பிரவீன் சூட். இந்த மாதத்துடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய இயக்குனரை நியமிக்கும் பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு சென்றுள்ளது. தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடி, லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், தலைமை நீதிபதி சஞ்சிவ் கன்னா ஆகியோர் டில்லியில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த இயக்குனராக யாரை பரிந்துரை செய்யலாம் என்பது பற்றி மூன்று பேரும் ஆலோசித்தனர். இவர்கள் பரிந்துரை செய்யும் அதிகாரி சிபிஐயின் புதிய இயக்குனராக பொறுப்பேற்பார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் அவர் நீடிப்பார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் ஆப்ரேஷன் எப்போது வேண்டும் என்றாலும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு சூழலில் மோடியும், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுலம் சந்தித்தது அரசியல் களத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகள், பாதுகாப்புத்துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என ஒவ்வொருவரையும் சந்தித்து மோடி ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட தாக்குதல் திட்டமும் தயாராகி விட்டது. மே 7ம் தேதி போர் ஒத்திகை, மீட்பு ஒத்திகையில் ஈடுபடும்படி பல மாநிலங்களுக்கு உள் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே 7ம் தேதிக்கு பிறகு எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி, ராகுல் சந்திப்பில் இந்த விவகாரம் பற்றியும் பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.