இம்ரானுக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டு சிறை; மனைவிக்கும் 7 ஆண்டு Pakistan court | former pm Imran Khan
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்து அரசியலுக்கு வந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை நிறுவி, 2018 பொது தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமர் ஆனார். அவர் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 2022ல் பாகிஸ்தான் பார்லிமென்ட்டில் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து இம்ரான் பதவி விலகினார். அவர் மீது மேலும் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. பரிசு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு வழக்கு, அரசு ரகசியங்களை வெளியிட்டது முதலான சில வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடைசியாக 2023 ஆகஸ்ட் மாதம், ஒரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். அதனால் அவர் ராவல்பிண்டி காரிசன் நகர சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறை வளாகத்துக்குள் இருக்கும் ஊழல் எதிர்ப்பு நீதிமன்றத்தில் அவர் மீது நில ஊழல் வழக்கு விசாரணையும் நடந்தது.