திமுக அரசை தோலுரித்த காங்கிரஸ்: கூட்டணி அம்போ?: பாஜ சந்தேகம் Praveen chakravarty | congress | dmk
தமிழகத்தின் நிலைமை மோசம் காங்கிரஸ் கொடுத்த சர்டிபிகேட்! உ.பி உடன் ஒப்பிட்டு திமுக அரசுக்கு சூடு திமுக ஆட்சியில் கடன் வாங்கியதில்தான் தமிழகம் நம்பர் ஒன் ஆக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக எம்பி கனிமொழி, எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டு சென்றார்கள். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் முதல் வளர்ந்த மாநிலமாக மாற்றி உள்ளார் என்றார். ஆனால், திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான காங்கிரஸ், எம்பி கனிமொழி சொன்னதை விமர்சித்து உள்ளது. காங்கிரசின் தரவு பகுப்பாய்வு துறை தலைவரும், ராகுலுக்கு மிக நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி தமது பதிவில், அனைத்து மாநிலங்களை விட தமிழகம் தான் அதிக கடனில் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். 2010ல் தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தின் கடன் 2 மடங்கு அதிகம் இருந்தது. இப்போது, உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் தான் அதிகமாக இருக்கிறது. வட்டி சுமை சதவீதத்தில் பஞ்சாப், ஹரியானவுக்கு அடுத்து தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இரண்டும் கோவிட்டுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். இதை சுட்டிக்காட்டி உள்ள பாஜவின் இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்ஜி சூர்யா, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதா? என சந்தேகம் கிளப்பி இருக்கிறார். அவரது பதிவில், காங்கிரஸின் தரவு பகுப்பாய்வு துறை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, திமுகவின் நிர்வாக திறமையின்மையை புள்ளிவிவரங்களுடன் தோலுரித்து காட்டி இருக்கிறார். தமிழகம் 9.5 லட்சம் கோடி கடனில் மூழ்கி, உத்தரபிரதேசத்தை விட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசம் நிதியை சிறப்பாக கையாளுகிறது. ஆனால், தமிழகத்தின் நிலைமை மிக ஆபத்தானது என்று காங்கிரசே சான்றிதழ் அளித்து இருப்பது வரலாற்று அவமானம். ராகுலின் வலது கரமாக இருக்கும் பிரவீன், இப்படி சொல்லிவிட்ட பிறகு திமுக இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது? என எஸ்ஜி சூர்யா கேட்டுள்ளார்.