நல்லவன் போல் நடித்து வஞ்சம் தீர்த்த நண்பனை தேடும் போலீஸ்
சென்னை, பெரவள்ளூர் அருகே லோகோ ஒர்க்ஸ் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. வயது 26. இன்டீரியர் டெக்கரேட்டர் ஆக பணியாற்றி வந்தார். நண்பர் பெங்கால் மற்றும் சிலருடன் சேர்ந்து மது குடிக்க சென்றுள்ளார். போதையில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனால், சந்துரு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்றுள்ளார். கோபத்தில் இருந்த பெங்கால், தமது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு, நண்பர்கள் 5 பேருடன் சந்துருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு நல்லவன் போல நடித்துள்ளார். சமாதானமாக போய்விடலாம் என நைசாக பேசி, சந்துருவை அருகே உள்ள பூங்காவுக்கு அழைத்து சென்றார். அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சந்துருவை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு பெங்கால் தப்பியோடி உள்ளார். இந்த கொலை சம்பவத்தால் பூங்காவில் இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர். சந்துருவின் உடலை போலீசார் கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். பெங்கால் மற்றும் அவரது கூட்டணிகள் கைதான பின்னரே சந்துரு கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.