செய்தி சுருக்கம் | 08 AM | 25-10-2024 | Short News Round Up | Dinamalar
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் “டானா புயல்” நிலை கொண்டிருந்தது. புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பின்னர் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா அருகே மிகத்தீவிர புயலாக இன்று காலை கரையை கடந்தது. மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்தன. 5 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்ததாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா வானிலை மையத்தில் இரவு முழுதும் புயல் மீட்பு பணிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆய்வு செய்தார். புயல் மீட்பு படையில், இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.