உள்ளூர் செய்திகள்

ஹபீபி

வௌ்ளித்திரையில் மின்னும் தாஜ்மஹால்உறக்கம் கொள்ளாது தொட்டிலில் புரளும் குழந்தையின் நிலை காதலுக்கும் வரும்தானே; தாலாட்டு பாடி அக்குழந்தையை உறங்க வைக்கும் தாயின் பொறுப்பை காதலில் ஏற்பது காலமும், சில மனிதர்களும்தானே! இக்கதை வழி அப்படியொரு தாலாட்டு பாடியிருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்! பொருள்வயப்பட்ட வாழ்வில் உறவுகளைப் பிரிந்து அரபு தேசங்களில் பணியாற்றும் தமிழக முஸ்லிம் க ளின் வாழ்வியல், அச்சு அசலாக திரை யில் விரிகிறது. இதன் பின்னணியில், கண்களால் காதல் வளர்க்கும் அபு தாஹிர் - நிலோபர் உறவு தேய் பிறையாக கரையும் தருணத்தில் இடைவேளை. அபு தாஹிரின் குடும்ப சூழ்நிலைகளும், பர்வீன் உடனான அவனது காதலின் முடிவுமாய் இரண்டாம்பாதி! எல்லாரையும் மேலே ஏற்றிவிட்ட ஏணி கீழே தனித்திருப்பது போலான யூசுப் பாத்திரத்தில் கஸ்துாரி ராஜா; பூர்வீக வீட்டில் இருந்து அவரது கைத்தறி பெயர்த்து எடுக்கப்படுகையில், ஆன்மாவின் ஒரு பாதியை இழப்பதை அவரது கண்கள் சொல்லிவிட, ஆன்மாவின் மிச்சம் பறிபோகும் காட்சியில் நம் கண்கள் குளமாகி விடுகின்றன. தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் இலக்கிய மேடைகளுக்கு வந்தது, கவிதைகள் எழுதியது உள்ளிட்ட மாற்றங்களை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. 'நண்பர்களின் மவுனத்தையே நினைவில் கொள்வோம்' என்கிற மார்ட்டின் லுாதர்கிங் வார்த்தைகளை, அபு தாஹிர் - பர்வீன் இடையிலான காதல் விரிசலுக்கு விளக்க உரையாய் தந்திருப்பது பெரும் தாக்கம் தருகிறது! சாம் சி.எஸ்.,ன் இசையும், மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவும் சமவெளியில் ஓடும் நதியாக சலனமின்றி செல்லும் கதையை சலிப்பின்றி ரசிக்க வைக்கின்றன. கதாபாத்திரங்கள் பேசும் நெல்லை வட்டாரத் தமிழ்... குற்றால சாரல். யூசுப்பின் இறுதிச்சடங்கில் கைப்பிடி மண் அள்ளிப் போடும் ஹிந்து நண்பன், 'அய்யா... நீ எப்படிய்யா தாங்குவே' என கதறும் காட்சி... தமிழ் சினிமா இதுவரையிலும் நம்மில் மீட்டாத உணர்வு! ஹபீபி ... ஆடி அனுபவிக்க வேண்டிய காதல் துாளி.ஆக...நான்கு சுவர்களுக்குள் 'ஷவர் பாத்' எடுப்பவனே... பெருநதி குளியலுக்கு விருப்பம் உண்டா... வா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !