உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்: அவளில் நனையும் அவர்

இவர் கங்கையின் கர்வம் அடக்கும் கங்காதரர் ஆகாயத்தில் இருந்து ஆர்ப்பரித்து வரும் கங்கையை, சடைமுடியால் தடுத்து சிவன் தன் தலையில் தாங்கும் பக்தி புராண காட்சி, பல்லவ சிற்பியின் கலைத்திறனால் குடைவரை உளி ஓவியமாகி வசீகரிக்கிறது. திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் முதலாம் மகேந்திரவர்மரால் உருவாக்கப்பட்ட இக்குடை வரை, 'லலிதாங்குரம்' எனும் அவரது பட்டப் பெயரில் அழைக்கப்படுகிறது! இடக்காலை ஊன்றியபடி வலக்காலை முயலகன் மீது வைத்து சற்றே இடை வளைத்து, நான்கு கரங்களுடன் ஒய்யாரமாக நிற்கிறார் சிவனான கங்காதரர். முன் வலக்கரம் படமெடுக்கும் பாம்பை பிடித்திருக்க, பின் இடக்கரம் 'அக்கமாலை' எனும் ருத்ராட்ச மாலை தாங்கியிருக்க, பின் வலக்கரம் ஒற்றை முடியில் கங்கையை தடுத்து சடையில் பூட்டுகிறது. கர்வம் அடங்கி கரம் கூப்பியபடி கங்கை. அலங்கார ஜடா மகுடம், மார்புக்கு கீழே உதரபந்தம், இடையில் கச்சை - கதி பந்தத்தோடு சிவனது தோற்றத்தில் பெரும் ராஜ கம்பீரம்! தன் குள்ள உடல் வளைத்து தலையாலும் இடக்கையாலும் சிவனின் கால் பாரம் தாங்கும் முயலகனை செதுக்குகையில் சிற்பியின் விரல்கள் வித்தை காட்டியிருக்கின்றன. 'அதோ பாருங்கள்... சிவனின் இடதுபுறம் காலுக்கு அருகில் பல்லவரான முதலாம் மகேந்திரவர்மர்' என ஆச்சரியம் ஊட்டுகிறார் வரலாற்றுப் பேராசிரியர் த. ரங்கநாதன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !