மனதுக்கு மாமருந்து மகிழ்விக்குது உடனிருந்து
''செல்லப்பிராணி வளர்ப்பது என்பது ஒரு கலை. இதிலும் பூனைகள் மிகவும் சென்சிட்டிவ்வான, அதேசமயம் அதிக பாசத்தை வெளிப்படுத்துபவை. அதன் சின்ன சின்ன முகபாவனைகளை ரசிக்க ஆரம்பித்துவிட்டால், உங்கள் மன அழுத்தம் நொடியில் பறந்து போகும். இதை நான் உணர ஆரம்பித்த பிறகே, 'கேட் இன்புளூயன்சராக' மாற ஆரம்பித்தேன்,'' என்கிறார், பெங்களூருவில் வசிக்கும், ஐடி., அனலிஸ்ட்டான ஹிந்தோலி. சினி, சிம்பா, பூக்கி என்ற தனது மூன்று பூனைகளுடன் வெளியூர் சுற்றுவது, அதன் முகபாவனைகளை வீடியோவாக பதிவேற்றுவது, அவைகளுக்கு புதிய இடங்களை அறிமுகப்படுத்துவது என, சமூக வலைதளங்களில் மியாவ்களுக்கான பிரத்யேக தகவல்களை பகிர்ந்து, பூனைகளின் உலகத்திற்குள் நம்மையும் சேர்த்து பயணிக்க வைக்கும், இவரை தொடர்பு கொண்டோம். நம்மிடம் பகிர்ந்தவை: ஐடி துறையில் வேலை என்பதால், பணிப்பளு அதிகம். மன அழுத்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்ததும், செல்போனை தான் கையில் எடுப்பேன். பூனைகள் சார்ந்த நிறைய வீடியோக்களை பார்ப்பேன். அது எனக்கு மிகுந்த இளைப்பாறுதலாக இருந்தது. இதனாலே, பூனை வளர்க்க ஆரம்பித்துவிட்டேன். முதலில் வீட்டிற்கு வந்தவள், எங்களின் இளவரசியான சினி. இவளுக்கு ஜோடி சேர்க்கவே, சிம்பா என்ற ஆண் பெர்ஷியன் பூனையை வாங்கினோம். இவர்களின் மகள் தான் பூக்கி. இம்மூவரும் தான் எங்களின் புதிய உலகம். இம்மூன்றும், பெர்ஷியன் இன பூனைகள். இவைகள் வீட்டிற்குள் வந்த பிறகு, எங்களின் மனநிலையில் நிறைய மாற்றங்களை உணர்கிறோம்; உடனிருந்து மனதுக்கு மாமருந்தாக வாய்த்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, இந்த பூக்கியின் முகபாவனைகளை சிறிது நேரம் ரசித்தாலே, அன்றைய நாள் முழுக்க சுறுசுறுப்பாகிவிடுவேன். இது, பூனை வளர்ப்பவர்களால் மட்டுமே உணரக்கூடிய விஷயம். எங்களின் அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிரவும், பூனை விரும்பிகளுக்காகவும் தான், கேட் இன்ப்ளூயன்சராக முடிவெடுத்தேன். அதாவது, பூனை வளர்ப்போரின் அனைத்து தேவை, தேடல்களுக்கும், எங்களால் முடிந்தவரை, வீடியோவாக எடுத்து பகிர்வதாகும். இது வருமானத்திற்கான வேலை அல்ல; மனநிறைவுக்கானது. என் பூனைகளின் பெயரில் சமூக வலைதளங்களில் பிரத்யேக பக்கம் துவங்கி (chubby cats official) , பூனைகளுக்கு பாதுகாப்பான சுற்றுலா தளங்கள், தங்குமிடங்கள், வெளியூர் அழைத்து செல்லும் போது பின்பற்ற வேண்டிய விஷயங்களை பதிவிட்டு வருகிறோம். எங்களின் 90 சதவீத பயணங்களில், பூனைகள் உடனிருக்கும். அப்படி அழைத்து செல்ல முடியாத சமயங்களில், அவைகளை பார்த்து கொள்ள என் பெற்றோர் கோல்கட்டாவில் இருந்து வந்துவிடுவர். குழந்தைகளை பராமரிப்பது போலவே தான், செல்லப்பிராணிகள் வளர்ப்பதும். இதில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ள கூடாது. இந்தியாவில் வளர்ந்த நகரங்களில் கூட, விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் செல்லப்பிராணிகளை தங்க அனுமதிக்கும் ஓட்டல்கள், சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. இதை அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளை போல, இங்கும் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேவைக்கேற்ப சேவை துறைகளில், இன்னும் கூடுதல் கவனம் செலுத்த, அரசும், தனியார் அமைப்புகளும் முன்வர வேண்டும், என்றார்.