உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப வீட்டில் ஒயரிங் அமைப்புகள் இருக்கணும்!

மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப வீட்டில் ஒயரிங் அமைப்புகள் இருக்கணும்!

பு திதாக கட்டப்படும் வீட்டில் ஒவ்வொரு பாகத்துக்கான பணியின் போதும், பயன்பாட்டு நிலையில் அது எப்படி இருக்கும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். பயன்பாடு ரீதியாக யோசித்து அதற்கு ஏற்ற மாற்றங்களுடன் கட்டடத்தின் பாகங்களை அமைக்கும் போது தான் எதிர் காலத்தில் பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க முடியும். மின்சார இணைப்புக்கான ஒயரிங், பிளம்பிங் வேலைக்கான வழித்தடங்கள் அமைப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். இந்த அமைப்புகள் விஷயத்தில் பல்வேறு புதிய புதிய மாற்றங்கள் வந்துள்ளன என்பதை புரிந்து, அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். பொதுவாக வீடுகளில் கட்டுமான பணியின் போது மேல் தளத்தில் மட்டும் ஒயரிங் குழாய்கள் பதிக்கும் வேலை மேற்கொள்ளப்படுவதை பார்த்து இருப்போம். இதில் மின்சார ஒயரிங் குழாய்கள் அமைக்கும் போது புதிதாக எழும் தேவைகளையும் கருத்தில் வைத்து உரிமையாளர்கள் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில் விளக்குகள், மின்விசிறி உள்ளிட்ட சாதனங்களுக்கு மட்டும் ஒயரிங் வழித்தடங்கள் அமைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது வீடுகளில் மின்சார சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், புதிய வரவுகளின் தேவைக்கு ஏற்ப வசதிகளை செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் பெரும்பாலான வீடுகளில் ஏசி, வாஷிங் மெஷின், வாட்டர் ஹீட்டர், குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து வீட்டில் குடியேறும் போது இந்த சாதனங்களை அமைப்பதற்கான இடம் தேடுவதைவிட, கட்டுமான நிலையிலேயே இதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். புதிய வகை மின்சார சாதனங்களுக்கான இணைப்பு வசதிகள் மட்டுமல்லாது அதற்கு தேவையான மின்சாரம் என்ன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த வகையில், பயன்பாடு அடிப்படையில் எந்த வகை மின்சார இணைப்பு தேவை என்று பார்த்து அதற்கான நடவடிக்கையை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், வீடுகளில் பால்சீலிங் அமைத்து விளக்கு அலங்காரம் மேற்கொள்வது, சிறப்பு ஒலி வசதி, சிசிடிவி வசதி ஆகிய விஷயங்களையும் கட்டுமான நிலையில் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டுமான நிலையிலேயே இந்த வசதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் அதற்கான ஒயரில் வழித்தடத்தை ஏற்படுத்தலாம். பெரும்பாலான வீடுகளில் தொலைபேசி மற்றும் இணையதள வசதி, கேபிள் 'டிவி' வசதி போன்ற தேவைகளுக்கான ஒயர்கள் வருவதற்கான வழித் தடத்தையும் திட்டமிட்டு ஏற்படுத்த வேண்டும். கட்டுமான பணிகள் முடிந்த பின், இதற்கான வழித்தடம் இல்லாததால் சுவருக்கு வெளியில் அதிக அளவில் ஒயர்கள் தொங்கிக்கொண்டு இருக்கும் நிலை ஏற்படும். பெரும்பாலான வீடுகளில் ேஹாம் தியேட்டர் மற்றும் சிசிடிவி போன்ற வசதிகளை அமைப்பது அவசியமாகி உள்ளது. இந்த வசதிகளை கருத்தில் வைத்து அதற்கான ஒயரிங் வழித்தடங்களை அமைப்பது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள். வீடு கட்டும் சமயத்தில் எழும் தேவைகளை மட்டும் பார்க்காமல், எதிர்காலத்தில் ஏற்படும் தேவைகளையம் கருத்தில் வைத்து தளம், சுவர்களில் ஒயரிங் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Saai Sundharamurthy AVK
நவ 10, 2025 19:15

இவையெல்லாவற்றையும் பிளான் வரைபடம் வரையும் போதே செய்து கொள்ள வேண்டும். அதற்கேற்றாற் போல் இடவசதியையும் அந்த வரைப்படத்திலேயே வரைந்து கொள்ள வேண்டும். எல்லாம் கட்டி முடித்த பின் ஆந்தை முழி முழித்துக் கொண்டிருக்க கூடாது. இந்த மாதிரி விஷங்களை யெல்லாம் மேஸ்திரி, கொத்தனார், எலக்ட்ரிசியன், பிளம்பர், கார்பெண்டர் என்று ஏன் ! சிவில் என்ஜினீயர்களுக்கே கூட தெரியாது. கட்டிடக்கலை படித்த ஆர்க்கிடெக்ட் அல்லது இன்டீரியர் டிசைன் வரைபடம் தயாரிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.


சமீபத்திய செய்தி