UPDATED : ஆக 18, 2023 06:58 PM | ADDED : ஆக 18, 2023 06:52 PM
கட்டுமான தொழில்நுட்பம் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. செங்கல் முதல் கம்பி வரை, பூச்சு வேலை முதல் பெயிண்டிங் வரை அனைத்திலும் புது தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. அதில் ஒன்று தான் ஏஏசி பிளாக் கற்கள். செங்கலுக்கு மாற்றாக இதனை கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்படுகின்றன.சென்னையில் கட்டப்படும் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏஏசி பிளாக்குகளை தான் செங்கலுக்கு மாற்றாக பொறியாளர்கள் தேர்வு செய்கின்றனர். ஏஏசி பிளாக்குகளை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மை என்று மேக்னா ஏஏசி பிளாக்ஸ் நிர்வாக இயக்குனர் சரவணன் கூறியதாவது:ஆட்டோகிளேவ் ஏரியேட்டட் கான்கிரீட் பிளாக் என்பதன் சுருக்கம் ஏஏசி. மணல், ஜிப்சம், சுண்ணாம்பு, சிமெண்ட், தண்ணீர் மற்றும் அலுமினியம் பவுடர் ஆகியவை கொண்டு இந்த ஏஏசி பிளாக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது வணிக வளாகங்கள், குடியிருப்பு, பள்ளி, கல்லூரிகள், அரசு திட்டங்களில் ஏஏசி பிளாக்குகள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த ஏஏசி பிளாக்குகள் வழக்கமான செங்கலை விட இலகுவாக இருக்கும். அதே சமயம் உறுதியானதாக இருக்கும். இதன் அளவுகள் கச்சிதமாகவும், பெரிதாகவும், இணைப்பு தேவைப்படுவது மிக குறைவாகவும் இருப்பதால், ஏஏசி பிளாக்குகளை வைத்து கட்டுமானத்தை எழுப்புவது வேகமாக நடைபெறும். கட்டுமானம் அமைந்தவுடன் க்யூரிங் எனும் தண்ணீர் அடித்து காய விட வேண்டிய கால அளவும் குறைவு. இதனால் சில நாட்களிலேயே பூச்சு வேலையை துவங்கலாம். இதன் மேற்பரப்பு சமமாக இருப்பதால் பூச்சு வேலையை விறுவிறுவென செய்து முடிக்கலாம். இது போன்ற நன்மைகளால் திட்டத்தின் வேலை நாட்கள் குறையும். இன்ச்சில் இருந்து 9 இன்ச் வரை பல்வேறு அளவுகளில் இது கிடைக்கிறது. இந்த கற்கள் உள்ளே இருக்கும் பபுள் காரணமாக வெளிப்புற வெப்பத்தின் தாக்கம் உட்புறம் குறைவாகவே இருக்கும். இதனால் மின்சார கட்டணமும் குறையும். அதே போல் செங்கல் கட்டடத்தை விட இது வெளிப்புற சத்தத்தை பெருமளவு தடுக்கும். அமைதியான சூழலுக்கு உதவும். தெர்மல் இன்சுலேஷன் கொண்டவையாக ஏஏசி கற்கள் இருப்பதால், செங்கல் கட்டடத்தை காட்டிலும் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.செங்கல்லை விட விலை கூடுதல் என்றாலும், ஒட்டுமொத்த கட்டுமான காலம் குறைவது, சிமென்ட் தேவை குறைவது போன்றவற்றின் மூலம் அந்தச் செலவு ஈடுகட்டப்படும். இவ்வாறு கூறினார்.