UPDATED : ஜூலை 16, 2025 06:45 PM |  ADDED : ஜூலை 16, 2025 06:43 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
எப்போதும் போர் மேகம் சூழ்ந்திருக்கும் பலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா தற்போது பசியும் வேதனையும் நிறைந்த துயர பூமியாக காட்சியளிக்கிறது.இடைவேளையின்றி நடைபெறும் போர் நடவடிக்ககைளும், சுற்றிவளைத்துள்ள மோசமான நிலமைகளும் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அழுத்துகின்றன, இதன் உச்சபட்சமாக அங்கு தற்போது கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.ஒரு பொது சமையலறையில் சமைத்து கொண்டுவரப்பட்ட உணவைப் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் குவிந்துள்ளனர்,வயோதிகர்கள், குழந்தைகள், பெண்கள் ,வேலிக்கு வெளியே நின்று பசியுடன் தவிக்கின்றனர், தங்களுக்கு ஒரு வாய் உணவு கிடைக்குமா? என ஏங்கி நிற்கின்றனர்.உணவு பெறுவதற்கான வரிசையில் தள்ளுமுள்ளும்,சலசலப்பும்,முடியாதவர்களின் அழுகுரலும் அந்த சூழ்நிலையை பெரும் அவலத்தில் உள்ளாக்கிவிடுகிறது.பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பதற்கேற்ப பெண்கள் நோயாளிகளை மட்டுமின்றி குழந்தைகளைக் கூட தள்ளிவிட்டு உணவை நோக்கி முன்னேறுகின்றனர். கடைசியில் பலர் உணவு பெறமுடியாமல் பலர் பாதியில் பசியுடன் திரும்புகின்றனர்,அடுத்த வேளை உணவு வரும் வரை அவர்கள் உயிர் அவர்களிடம் இருக்குமா? என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாத சூழ்நிலை.உக்ரைன் யுத்தம்,அமெரிக்க அதிபரின் அதிரடி நடவடிக்கைகள்,சீனாவின் அரசியல் பரபரப்புகள் இவையே பரபரப்பான உலக செய்திகளாக மாறிவிட்ட நிலையில் காசா பகுதி மக்களின் பசிக்கான அழுகுரல் எல்லாம் பழகிப்போன பழைய செய்தியாகிவிட்டது. காசாவில் நடந்து வரும் இந்த உணவுக்கான போராட்டம், ஒரு சமூகத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம், இது கண்டுகொள்ளாமல் கடந்து விடக்கூடிய ஒரு செய்தி அல்ல. இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் மனிதநேயம் கொண்டவர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கும் செய்திகளாகும்,உலகின் ஒரு புறம் பசிக்கான குழந்தைகளும்,பெண்களும்,மக்களும் அழும்போது உலகின் மறுபுற எல்லையில் இருக்கும் நாம் காதுகளை மூடிக்கொண்டுதான் இருக்கவேண்டுமா?உலகம் குரல் கொடுக்க வேண்டும் - இல்லையெனில் மனிதநேயம் என்பது வெறும் வார்த்தையாகவே மாறிவிடும்.----எல்.முருகராஜ்