UPDATED : ஏப் 10, 2026 08:46 PM | ADDED : ஏப் 10, 2026 08:43 PM
போலந்து நாட்டின் ஒட்ரெபஸி பகுதியில் தற்போது ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்து வருகிறது.அது அங்குள்ள தவளைகள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக தாங்கள் வாழும் நிலப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் துாரம் உள்ள நீர்நிலைகளை நோக்கி இனப்பெருக்கத்திற்காக செல்கின்றன.அவை செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடக்கூடாது என்பதற்காக அவைகள் கடக்கும் இடத்திற்கு முன்பாக எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர் மேலும் ஒருபடி மேலே போய் அங்குள்ள இயற்கை ஆர்வலர்கள் இரவு பகலாக இடம் பெயரும் அந்த தவளைகளை சேகரித்து அது போகும் இடத்திலேயே கொண்டு போய் விடுகின்றனர்.தவளைகள் நீர் வாழ்விடங்களில்தானே வாழும் அவை எதற்கு இன்னோரு நீர் நிலையை நாடி இடம் பெயரவேண்டும் என்றொரு சந்தேகம் இந்த இடத்தில் எழும்.தவளைகளுக்கு அதே இனத்தை சேர்ந்த தேரைகளுக்கும் ஒரு பழக்கம் உண்டு அவை என்னதான் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்தாலும் முட்டையிடுவதற்கு இன்னோரு நீர் நிலைக்குதான் செல்லும் அங்கு சென்று முட்டையிட்டுவிட்டு பின் மூன்று வார இடைவெளியில் திரும்பிவிடும்.ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற தவளைகள் அதிக குளிரை தாங்காது அம்மாதிரியான சமயங்களில் மண்ணுக்கு அடியிலோ, இலை தழைகளுக்கு அடியிலோ அல்லது குளத்தின் ஆழத்திலோ சென்று பதுங்கிக்கொள்ளும்.இந்த நேரத்தில் அவற்றின் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் மிக மெதுவாக நடக்கும்.தன் உடலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை வைத்துக்கொண்டு, உணவு உட்கொள்ளாமல் பல மாதங்கள் அப்படியே இருக்கும். இதை தவளைகளின் குளிர்கால உறக்கம் என்பர்.இந்த உறக்கம் கலைந்ததும் பெரும்பாலும் முட்டையிடுவதற்காக நீர்நிலைகளை நோக்கி நகரும். இந்த இடப்பெயர்வு காலங்களில் தேரைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க தன்னார்வலர்கள் உதவுவார்கள் அல்லது சாலைகளின் அடியில் பிரத்யேகமாக 'தேரை சுரங்கப்பாதைகள்'அமைக்கப்பட்டிருக்கும்.இனப்பெருக்கக் காலத்தின் போது ஓரிடத்தில் இருந்த தவளைகள், பாதுகாப்பான மற்றும் ஆழமற்ற முட்டையிட வசதியான வேறொரு நீர்நிலையைத் தேடி இடம் பெயரும், முட்டையிட்டு முடிந்ததும் (சில நாட்களில் அல்லது வாரங்களில்), தேரைகள் மீண்டும் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதிக்கே (காடு அல்லது தோட்டம்) திரும்பிவிடும். குஞ்சுகள் (தலைப்பிரட்டைகள்) வளர்ந்து தவளைகளாக மாறிய பிறகு அவை நிலத்திற்கு வந்துவிடும்.உயிரினங்களின் வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்.-எல்.முருகராஜ்.