கோவிட் நேரத்தில் ஆன் லைன் வகுப்புகள் வந்த போது சும்மாயிருந்த குழந்தைகளிடம் மொபைல் போனை நாம்தான் கொடுத்தோம்..இப்போது குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டன,மொபைல் போனிடம் இருந்து குழந்தைகளையும்,குழந்தைகளிடம் இருந்து மொபைல் போனையும் பிரிக்கமுடியாமல் தவிக்கிறோம் என ராஜன் கண் மருத்துவமனை சேர்மன் மோகன் ராஜன் மிக உருக்கமாக பேசினார்.
கண் பார்வைக் குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கோவிட்டிற்கு பிறகு மிக அதிகமாகிவிட்டது, ஒரு வகுப்பில் ஒரு குழந்தை கண்ணாடி போட்டது போக இப்போது வகுப்பில் ஏதாவது ஒரு குழந்தைதான் கண்ணாடி போடாமல் இருக்கிறது.
கிட்டப்பார்வை,துாரப்பார்வை,ஒரு கண்ணில் மட்டும் பார்வை என்று பார்வைக்கு குறைபாடு குழந்தைகளுக்கு மிகவும் சகஜமாகிவிட்டது.இதற்கு முழு முதற்காரணம் அதிக வெளிச்சம் உமிழும் மொபைல் போன்,டேப்லெட்,ஐபேடு,கம்ப்யூட்டர் போன்றவைகளை கண்ணுக்கு மிக அருகில் வைத்து பார்ப்பதுதான்.சீனாவில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மொபைல் போன் பார்க்க தடைவிதித்துள்ளனர்.அவர்கள் எங்குமே மொபைல் போன் பார்க்ககூடாது.குறிப்பிட்ட துாரத்தில் இருந்து குறிப்பிடப்பட்ட குழந்தை சானல்களை குறுகிய நேரம் வரை டி.வி.,யில் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்.மொபைல் போன் மட்டுமின்றி டேப்லெட்,ஐபேடு,கம்ப்யூட்டரை பார்க்கவே கூடாது என்று உத்திரவு போட்டுள்ளனர்.நம்முடைய நிலமை மிக மோசம் அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி என்று ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தை கேட்டு கெஞ்சுகிறதே என்று எண்ணி மொபைல் போனைக் கொடுத்து கெடுத்துவருகிறோம்.இப்போது கண் பார்வைக்கு குறைபாடுள்ள குழந்தைகள் கனத்த கண்ணாடி போடவேண்டும், அடிக்கடி பரிசோதனைக்கு வந்து 'பவரை' சரிபார்த்துக் கொள்ள வேண்டும், கண்ணாடியை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும் இப்படியான தொடர் தொல்லையில் இருந்து விடுபட ஒரே வழி மொபைல் போன் பார்க்காமல் இருப்பதுதான்.அது மட்டுமல்ல குழந்தைகளை காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் வெயிலில் ஒவ்வொரு நாளும் விளையாட அனுமதியுங்கள், கீரை,காய்கறி,மீன்,முட்டை போன்ற கண்ணுக்கு நன்மை செய்யும் உணவுகளை கொடுங்கள்.சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் கண் பார்வை குறைபாடுள்ள ஆயிரம் குழந்தைகளுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கும் விழா நடைபெற்றது, அந்த விழாவில் பேசும் போதுதான் டாக்டர் ராஜன் இப்படி உருக்கமாக பேசினார்.--எல்.முருகராஜ்