கோபத்தில் உருவான உருளை சிப்ஸ்!
உருளைக்கிழங்கு சிப்ஸ் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? எத்தனை வகையான சிப்ஸ்கள் இருந்தாலும், உருளைக்கிழங்குக்கே முதலிடம்.அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரம் (George Crum) என்பவர் நியூயார்க் மாகாணத்தில் உள்ள 'சரடோகா ஸ்பிரிங்ஸ்' (Saratoga Springs) என்ற நகரில் பிரபல சமையல் கலைஞர். அவர் பணி செய்துகொண்டிருந்த பிரபல உணவகத்திற்குப் பெரும் தொழிலதிபரான கார்னெலியஸ் வாண்டர்பில்ட் (Cornelius Vanderbilt) என்பவர் வந்தார். அவர் எதிர்பார்த்தபடி'பிரெஞ்சு ஃப்ரைஸ்' இல்லை என்றும், தடிமனாக இருப்பதாகவும் கூறி ஜார்ஜிடம் கோபித்துக்கொண்டார். பல ஆண்டுகளாக சமையல் துறையில் இருந்த ஜார்ஜூக்கு இவருடைய விமர்சனம், மன உளைச்சலை அளித்தது. உடனே சமையல் அறைக்குச் சென்று, உருளைக்கிழங்கை வட்ட வட்டத் துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து மீண்டும் கார்னெலியசுக்குக் கொடுத்தார். முதலில் கோபமாக கடிந்துக்கொண்டவர், ஜார்ஜைப் பாராட்டித் தள்ளிவிட்டார். ஆகஸ்ட் 24, 1853 அன்றுதான் முதன்முதலில் 'சிப்ஸ்' என்ற பண்டம் உருவானது. ஜார்ஜ் க்ரம் தயாரித்த உருளைக்கிழங்கு சிப்ஸ், முதலில் சரடோகா ஸ்பிரிங்ஸ் நகரத்தின் விருப்ப உணவானது. அதன்பிறகே மெல்ல மெல்ல அமெரிக்கா முழுக்கப் பிரபலமானது. 1895-ஆம் ஆண்டு வரைக்கும் உருளை சிப்ஸ், அமெரிக்க உணவகங்களில் கிடைக்கும் உணவாக மட்டுமே இருந்தது. பின்னர், வில்லியம் டேப்பெண்டன் என்பவர் முதன்முதலாக உலகின் சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கினார். அதன்மூலம், உலகம் முழுவதும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பிரபலமானது. ஹெர்மன் லே என்ற தொழிலதிபர் இதற்கான சந்தையை உருவாக்கினார். சிப்ஸ்களை பைக்குள் அடைத்து, உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் தொழிலை ஆரம்பித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். ஜார்ஜ் கண்டுபிடித்த சிப்ஸ் என்ற பண்டம் அவருக்குப் பின்னும் பலரால் மேம்படுத் தப்பட்டது. ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பலரும் இருட்டிப்பு செய்தனர். நீங்கள் அடுத்தமுறை எப்போதாவது உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடும்போது ஜார்ஜூக்கு நன்றி சொல்லுங்கள். - காரா