முதல் ரோபோ குடிமகள் சோஃபியா
ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ரோபோவான 'சோஃபியா'வுக்கு செளதி அரேபிய நாடு, குடிமகள் அந்தஸ்து கொடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ள ரோபோ ஒன்றுக்குக் குடியுரிமை கொடுக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன் முறை. அக்டோபர் 25ம் தேதி 'சோஃபியா'வுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.ரியாத் நகரில் நடைபெற்ற ஃபியூச்சர் இன்வெஸ்ட்மென்ட் இனிஷியேடிவ் நிகழ்ச்சியில், நிருபர் ஒருவரது கேள்விகளுக்குப் பதில் அளித்து அரங்கத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள் 'சோஃபியா.' “மனித இனத்தோடு இணக்கமாக வாழவே தாம் விரும்புவதாகத்” தெரிவித்த சோஃபியாவின் உயரம் 14 அங்குலம். 50 விதமான முகபாவங்களை வெளிப்படுத்தவல்லது. கோபத்தை வெளிப்படுத்த பற்களைக் காட்டுவது, வருத்தத்தைத் தெரிவிக்க புருவத்தை உயர்த்துவது ஆகியவற்றைச் செய்யும் சோஃபியாவால், மகிழ்ச்சியை மட்டும் இன்னும் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. செளதி அரேபிய குடியுரிமை வழங்கப்பட்ட செய்தியை 'சோஃபியா'வுக்குச் சொன்னவுடன், “செளதி அரேபிய மன்னருக்கு நன்றி. இந்தப் பிரத்யேகமான கெளரவத்தினால் பெருமை அடைகிறேன். இந்த உலகில் குடியுரிமை பெறும் முதல் ரோபோவாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்தது.செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டு வரும் சாதனைகளின் மணிமகுடமாகத் திகழ்கிறது 'சோஃபியா' ரோபோ.'சோஃபியா' ரோபோவை உருவாக்கியவர் டேவிட் ஹன்சன் என்பவர். வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் பணியாற்றியவர் ஹன்சன். இவர் ஏற்கெனவே மனித வடிவிலான ரோபோக்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர். 'அலபர்ட் ஹுபோ' என்ற பெயரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முகஜாடையோடு நடக்கும் ரோபோ ஒன்றை இவர் வடிவமைத்தார். மேலட்டையில் 'சோஃபியா' ரோபோவோடு இருப்பவர் டேவிட் ஹன்சன் தான்.