குப்பையைக் குறைப்போம்
மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்போது அவர்கள் வாங்கி அனுபவிக்கும் பொருட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் உயர்வது நல்ல விஷயம்தான். பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கு இணையாகக் குப்பையின் அளவும் அதிகரிக்கிறதே! இன்றைய நிலையில், ஒருவரின் வருமானம் ஆயிரம் ரூபாய் உயர்ந்தது என்றால், அவர் ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ குப்பையை அதிகமாக உற்பத்தி செய்கிறார்.பிளாஸ்டிக் பைகள், காலி பாட்டில், டப்பா, பேப்பர், பாட்டரி செல், பால்பாய்ன்ட் பேனா, பழுதடைந்த கணினி, கத்தரிக்காய் காம்பு, பூசணித்தோல், முட்டை ஓடு, வாடிய பூச்சரம்...இப்படி விதவிதமான குப்பைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். நாம் போடும் குப்பையில் என்ன என்ன இருக்கிறது?48% மக்கி உரமாகக்கூடிய குப்பை. வாழைப்பழத் தோல், காய்கறிக் கழிவு, மீதமாகிக் கெட்டுப்போன உணவு. இது மாதிரி.இவற்றை உரமாக மாற்ற முடியும். ஒரு பேச்சுக்கு நமது நாட்டின் மக்கக்கூடிய குப்பை அனைத்தையும் உரமாக்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி மட்டும் செய்துவிட்டால் நமது நாட்டின் மொத்த விளை நிலங்களுக்கும் நல்ல சத்தான உரம் கிடைத்துவிடும்.23% பிளாஸ்டிக், பேப்பர், கண்ணாடி, உலோகம், பழைய துணிகள் எல்லாம் சேர்த்து. இவை அனைத்தையும் தனியாகப் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். மீதம் 29%, மண், தூசு போன்ற வினை புரியாத பொருட்கள்.ஆங்கிலத்தில் 'இனர்ட் வேஸ்ட்' (Inert Waste) என்கிறார்கள். உண்மையில் குப்பைத்தொட்டிக்குப் போகவேண்டியது இந்த இனர்ட் வேஸ்ட் மட்டும்தான்.குப்பையை வீட்டளவில் பிரிக்காமல், எல்லாவற்றையும் கலந்து தெருமுனையில் இருக்கும் குப்பை தொட்டியிலோ, தெரு ஓரத்திலோ வீசிவிடுகிறோம். நாம் போடும் குப்பையில் 60%தான் அகற்றப்படுகிறது. மீதம் 40% குப்பை, சுற்றுப்புறத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது.அகற்றப்படும் குப்பையிலோ 95% பாதுகாப்பற்ற முறையில் 'லேண்ட் ஃபில்' (Land fill) எனப்படும் திறந்தவெளிக் குழிகளில் கொட்டப்படுகிறது. அல்லது எரிக்கப்படுகிறது.வீட்டளவிலேயே குப்பையைப் பிரித்தால் குழிகளில் கொட்டும் குப்பையின் அளவை மூன்றில் இரு பங்காகக் குறைக்கலாம் இல்லையா? சராசரியாக ஓர் இந்தியர் ஒரு நாளைக்கு 320 கிராம் அளவுக்கு குப்பை போடுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒருவர் போடும் குப்பையின் சராசரி அளவு 630 கிராம்.