உள்ளூர் செய்திகள்

இந்தியச் செல்வந்தரின் இனிய செயல்!

இந்திய கிறிஸ்தவர் ஒருவர், துபாய் முஸ்லிம் பணியாளர்களுக்காக இரண்டரைக் கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிவாசல் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இச்செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் காயம்குளத்தைச் சேர்ந்தவர் சாஜூ செரியன், வயது 49. இவர், 2003இல் துபாய் சென்று தொழில் தொடங்கினார். விரைவிலேயே பெரும் கோடீஸ்வரர் ஆனார்.புஜைராவில் உள்ள அல்ஹைல் தொழிற்பேட்டையில், அவருக்குச் சொந்தமான கட்டடத்தில், ஏராளமான பணியாளர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். அதில் முஸ்லிம் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர், தொழுகைக்காக நீண்டதூரம் செல்ல வேண்டியிருந்தது. இதைப் பார்த்த சாஜூ, 'அந்த பகுதிக்குள்ளேயே பள்ளிவாசல் இருந்தால், நன்றாக இருக்குமே' என்று சிந்தித்தார்.இதையடுத்து, தனது சொந்தச் செலவிலேயே புதிய பள்ளிவாசல் ஒன்றைக் கட்டிக் கொடுக்க முடிவெடுத்தார். அதற்காக, 2013இல் நிலம் வாங்கிக் கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். சாஜூவின் முயற்சியைப் பார்த்த துபாய் அரசு, இலவச மின்சாரம், தண்ணீர் வழங்க முன்வந்தது. செல்வந்தர்கள் பலரும் நன்கொடை அளிக்க முன்வந்தனர். ஆனால், எல்லாவற்றையும் அவர் மறுத்துவிட்டார். அவரது சொந்தப் பணத்தில், 2.4 கோடி ரூபாய் செலவில் பள்ளிவாசலைக் கட்டி முடித்துள்ளார்.'நாங்கள் கிறிஸ்தவ மதத்தினர். நான் பள்ளி வாசல் கட்டியதில் பலருக்கும் ஆச்சரியம். நான், ஜாதி, மத, நிற, தேசப் பாகுபாடு பார்ப்பதில்லை. எங்கள் ஊரில் மத வேறுபாடின்றி மிகவும் இணக்கத்துடனேயே பழகுவோம். நான் கட்டிய பள்ளிவாசலில் சுமார் ஆயிரம் பேர் தொழ முடியும். ரமலான் மாதத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது நிறைவேறியதில் மகிழ்ச்சி,' என்று சாஜூ கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !