UPDATED : ஜூன் 04, 2025 12:19 PM | ADDED : ஜூன் 01, 2025 04:10 PM
மருத்துவமனை ஒன்றில், கணவனும், மனைவியும் அவசர சிகிச்சை பெற, ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்வதற்காக பெட்டில் இருக்கின்றனர்,அந்த நிலையிலும் தன் மனைவியின் கைபிடித்து கணவன் ஆறுதல் சொல்கிறான், மனதைத் தொடும் இது போன்ற பல படங்கள் சென்னையில் நடந்துவரும் புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.சென்னையில்,போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் சர்வதேச அளவிலான புகைப்படக் கண்காட்சி கீரிம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்து வருகிறது. கண்காட்சியை திரைப்பட ஒளிப்பதிவாளர் சேதுமாதவன் துவக்கிவைத்தார். இந்த கண்காட்சியில் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் எடுத்த சிறந்த படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் (பிஎஸ்எம்) அமைப்பின் தலைவர் ராமசாமி, துணைத் தலைவர் நாராயணன், செயலாளர் லஷ்மி நராயணன், பொருளாளர் சிவலை செந்தில்நாதன், இயக்குனர் பாலு, நிகழ்ச்சி அமைப்பாளர் அசோக் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஒப்பென் கலர், மோனோக்ரோம், லாண்ட்ஸ்கேப், சின்னங்கள், வனவிலங்கு, ஸ்ட்ரீட் போட்டோகிராபி மற்றும் போர்ட்ரெய்ட் ஆகிய தலைப்பில் 340 புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வருகின்ற 7 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும். பார்வை நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணி வரை. அனுமதி இலவசம்.