உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்திப்போமா / நாளை... நம் நிலை என்ன?

நாளை... நம் நிலை என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள் சபையின் 'மக்கள் தொகை நிதியம்' அமைப்பு, 'இந்தியா ஏஜிங் ரிப்போர்ட்' என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தியது. அதில், இந்தியாவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் எண்ணிக்கை, 14.9 கோடி. இது, மொத்த இந்திய மக்கள் தொகையில், 10.5 சதவீதம்.

1,500 முதியோர் காப்பகங்கள்

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகளில், முதியோர் நலன் இரண்டாம் பட்சமாகவே பார்க்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு, வங்கி கடன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. முதியோர் நலன் சார்ந்த சட்டங்களோ, திட்டங்களோ அவர்களுக்கு உதவும் வகையில் இல்லை. சலுகைகளும் கூட பெயரளவிலேயே உள்ளன; இருக்கும் சில திட்டங்களும் போதுமானதல்ல.தமிழகத்தில் சுமார் 1,500 முதியோர் காப்பகங்கள் இருக்கலாம். பெரும்பாலானவை கட்டண முறையிலானவை. முதியோர் காப்பகங்களில் லட்சக்கணக்கானோர் கடைசிக் காலத்தை வலியுடன் கழிக்கின்றனர். காப்பக முதியவர்கள் அனைவருமே வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அல்ல. 'தனக்கான மரியாதையில்லை' 'பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க வேண்டாம்' என்பது போன்ற காரணங்களால் தாமாக வெளியேறியவர்களும், தவறுசெய்து விட்டுவீட்டை விட்டு ஓடி வந்தவர்களும் உண்டு.முதியோரில் பலரும் ஒரு காலத்தில் நல்ல நிலைமையில் இருந்தவர்கள்; நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் செல்வாக்கோடு இருந்தவர்கள். ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஓராயிரம் கதைகள் இருக்கும். இள வயதில் அவர்களது கட்டுப்பாட்டில் தான் வீடே இருந்திருக்கும். அவர்கள் சொல்வதே முடிவு; வைத்ததே சட்டம் என வாழ்ந்தவர்கள். குடும்பத்துக்காக உழைத்தவர்கள். சுக துக்கங்களை தியாகம் செய்தவர்கள்.

இறுதி மரியாதை செய்ய கூட வருவதில்லை

முதுமையால் சம்பாத்தியத்தை இழக்கும்போது, உடல்வலு குறையும் போது வீட்டில் செல்லாக்காசாக பல நேரங்களில் துாக்கி வீசப்பட்டுவிடுகின்றனர். பாரமாக, தேவையற்ற சுமையாக பிள்ளைகள் பலரும் கருத துவங்கிவிடுகிறார்கள். வசதியற்றவர்கள் இலவச காப்பகங்களில் விட்டுவிடுகிறார்கள். சிலர் துரத்தி விடுகிறார்கள். ஆதரவற்ற நிலையில் அலையும்போது மீட்கப்பட்டு எங்களைப் போன்றவர்கள் பராமாரிக்கிறார்கள். வசதி படைத்தோர் 'பெய்டு ஹோம்'மில் சேர்த்து விடுகிறார்கள். இதுவும், பெற்றோரைக் கைவிடுதல் தான்.வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகள், உயிருக்கு போராடும் தங்கள் பெற்றோரை பார்க்கக் கூட வருவதில்லை. உயிரிழந்துவிட்டால் 'பணம் அனுப்புகிறேன்; அடக்கம் செய்து விடுங்கள்' என்கின்றனர். இறுதி மரியாதை செலுத்தக்கூட வருவதில்லை. காப்பக முதியோர்களை விட, வீட்டில் தனிமையில் இருப்போர் நிலைமை இன்னும் மோசம். தற்கொலை, இயற்கை மரணம் போன்றவை நிகழ்ந்தால் யாருக்கும் தெரிவதில்லை. துர்நாற்றம் வீசிய பிறகே அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

உறவுகளை நினைத்து ஏக்கம்

காப்பக முதியோர் வெளிப்பார்வைக்கு நிம்மதியாக இருப்பது போன்று தோற்றமளித்தாலும் உறவுகளை நினைத்து அவர்கள் உள்ளுக்குள் உருகுவதை நாங்கள் நன்கறிந்திருக்கிறோம். முதியோர் நம்மிடம் பணத்தை எதிர்பார்ப்பதில்லை. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணம் அவர்களுக்கு பயன்படாது. எதிர்பார்ப்பது ஆறுதலான சில வார்த்தைகள். அதைக்கூட கொடுக்க நம்மில் பலருக்கும் மனமில்லை.கருவுற்ற பெண்கள், சிறு குழந்தைகள், வளர் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக அரசாங்கம் போதுமான மருத்துவ உதவிகள், ஆலோசனைகளை வழங்குவது போன்று முதியோருக்கான திட்டத்தையும் அமல்படுத்தலாம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதியோரை வீட்டிலேயே சந்தித்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, அரசே ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு தேடி மருத்துவம் திட்டத்தின் சேவையை முதியோரை சென்றடைகிறதா என்பதை பொது சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.இறுதியாக பிள்ளைகளுக்கு ஒரு வேண்டுகோள்... தினமும் பெற்றோரிடம் சிறிது நேரம் மனம்விட்டு பேசுங்கள். வெளியூர்களில் வசித்தால்கூட போனில் நலம் விசாரியுங்கள். நம்மைத் துாக்கிச் சுமந்தவர்களை, சுமையாக கருதி துாக்கி வீசிவிடாதீர்கள். நாளை, நமக்கும் முதுமையுண்டு என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்! கட்டுரையாளர், கோவை மாநகராட்சியின் ஆதரவற்றோர் காப்பகத்தை, 'ஈரநெஞ்சம் அறக்கட்டளை' வாயிலாக பராமரிப்பவர்காப்பக முகவரியுடன் வாக்காளர் அடையாள அட்டைபெற்று, ஓட்டுரிமையை செலுத்த வைத்தவர். சாலைஓரங்களில் ஆதரவின்றி சுற்றித் திரிந்த 500க்கும்மேற்பட்டோரை மீட்டு சிகிச்சை அளித்து, குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தவர்.

- ப.மகேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Prem
பிப் 14, 2024 21:30

நானும் இந்த தவறை செய்கின்றேன். படிப்பினை இல்லாததது என்னை அவர்களை விட்டு ஓட வைத்தது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 14, 2024 13:19

ஒவ்வொரு செடியும் வளர்ந்து, பூத்து, காய்த்து, பழுத்து, வாடி, வதங்கி, மடியும். இது இயற்கை நிகழ்வு. ரொம்ப யோசிக்கக் கூடாது. காலம் தன் கடமையை சூழலுக்கு ஏற்ப சரிவர தொடர்ந்து செய்தது, செய்கிறது, செய்யும். இது ஒவ்வொரு உயிருக்கும் பொருந்தும். மனிதனும் தானும் ஒரு செடிபோலத்தான் என்பதை உணர்ந்து, தனது மரணத்தை தனிமையுடன், விருப்பத்துடன் எதிர்நோக்கி, ஏற்க கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க பல்லாண்டு, வாழ்ந்த பின் வீழ்க.


Mohan
பிப் 14, 2024 10:19

இதுக்கு முழுக்க முழுக்க காரணம் பெண்கள் தான் ...ஒரு பெண் தன்னுடைய மாமனார் மாமியாரை கண்டுகொள்வதில்லை இதுவே அவுங்க பெற்றோர நல்ல கவனித்துக்கொள்கிறார்கள்.. ரெண்டு: ஆன் பிள்ளைகள் எல்லாம் பெண் பித்து பிடித்து அவர்கள் பின்னே ஓடுகிறார்கள் ...பெண்டாட்டி மடியே சொர்கம் என்று இருப்பவர்கள் அதிகம் பேர் ... இது ஆன்மிக அறிவு இல்லாததால் வருவது ...இன்று நீ நாளை நாம் என்று பாவம் திரும்ப வரும் என்று சொல்ல, நினைக்க ஒரு அடித்தளம் யாரும் இல்லை ... பாவம் செய்ய அஞ்ச வேண்டும் ...எனக்கு தெரிந்த நிறைய பேர் தன மனைவி கண்டுகொள்ளவில்லை என்றாலும் பிள்ளைகள் முடிந்தளவு தன்னுடைய பெற்றோரை பராமரிக்கிறண்டனர் அவர்கள் போற்றுதளுக்கு உரியவர்கள் பெற்றோரை பேணி காப்பது நம் கடமை ....குலதெய்வ சாபம் பொல்லாதது ..அதற்கு விமோச்சனம் கிடையாது


VENKATASUBRAMANIAN
பிப் 14, 2024 08:48

பெற்றோர்களும் ஒருவகையில் காரணம். தங்கள் பிள்ளைகளை அமெரிக்கா ஐரோப்பா இங்கிலாந்து ஜெர்மனி என்று அனுப்பி விட்டு பெருமை பேசி திரிந்தார்கள். அதன் விளைவு. இன்றும் சிலர் வெளிநாட்டு வேலை வாய்ப்பை உதிரி தள்ளுகின்றனர். நம் வளர்ப்பும் ஒரு காரணம். மேலும பிள்ளைகளும் பணத்தின் பின்னால் அலையாமல் குடும்பத்தையும் பார்க்க வேண்டும்.


விஸ்வநாத் கும்பகோணம்
பிப் 14, 2024 08:32

கட்டுரையாளரின் சேவை போற்றுதலுக்குரியது. முதுமையே ஒரு கொடிய நோயாக இருக்கும் போது அவர்களுக்கு வரும் நோய்களுக்கு யார் சிகிச்சை தருவது? மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் பற்றி தமிழகத்தில் பல முதியோர்களுக்கு தெரிவதில்லை. மாநில திமுக அரசு மத்திய அரசின் எந்த நல்ல திட்டங்களையும் இங்கு அனுமதிப்பதில்லை. முதியோர் எண்ணிக்கையை கணக்கெடுத்து அவர்களுக்கு காப்பீடு அட்டை வழங்க வேண்டும். நம் நாட்டின் இளைஞர் எண்ணிக்கையில் பெருமைப்படும் அரசு அதற்கு ஆதாரமான முதியோர் எண்ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய நாடுகள் போல் எல்லா முதியோருக்கும் பென்ஷன் என்பது போல இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும். முதியோர்களை கௌரவமாக வாழ வைக்கலாம்.


Ramesh Sargam
பிப் 14, 2024 06:16

கட்டுரையாளர் நலமுடன் பல்லாண்டு வாழ்க.


Ramesh Sargam
பிப் 14, 2024 06:11

வெளிநாடுகளில் வசிக்கும் குழந்தைகள், உயிருக்கு போராடும் தங்கள் பெற்றோரை பார்க்கக் கூட வருவதில்லை. உயிரிழந்துவிட்டால் 'பணம் அனுப்புகிறேன் அடக்கம் செய்து விடுங்கள்' என்கின்றனர். இதைப்படித்துவிட்டு மனது மிகவும் சங்கடப்பட்டது. ஆம், ஒரு சில வெளிநாடு வாழ் பிள்ளைகள், அவர்கள் பெற்றோரை பாரமாக நினைக்கின்றனர். அவர்களுக்கும் அப்படி ஒரு நிலைமை வந்தால், அவர்கள் எப்படி சங்கடப்படுவார்கள் என்று எண்ணவேண்டும். பெற்றோர்களை மதிக்கவேண்டும்.


Rajarajan
பிப் 14, 2024 06:05

வலியுடன் கட்டுரை, யதார்த்தமான உண்மை. நிஜத்தை வெளிகொண்டு வந்ததற்கு நன்றிகள். இதேபோல, ஒரு குறிப்பிட்ட முன்னேறிய பிரிவினரில், பெண்ணை பெற்றவர்கள், தங்கள் பெண்ணுக்கு காலம் கடந்தும் திருமணம் செய்துவைக்காமல் இருக்கும், கசப்பான உண்மை பற்றிய கட்டுரை தொகுப்பை வெளியிட்டால் நன்றாக இருக்கும். பூனைக்கு யார் மணி காட்டுவர் ??


Kasimani Baskaran
பிப் 14, 2024 06:01

வயதானவர்களை பராமரிப்பது நமது உரிமை மற்றும் பாரம்பரியம். அதிலிருந்து விலகியிருக்காமல் நேர் வழியில் செல்வது நமது சந்ததியினருக்கே நல்ல வருங்காலத்தை அமைத்துக்கொடுக்கும்.


புதிய வீடியோ