நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளை திறக்கிறது தேசாந்திரி
வாசகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, புத்தக வாசிப்பாளர்கள் தங்கள் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, 'தேசாந்திரி' என்ற கட்டுரை நுால் குறித்து, கோவை அக்யூரா பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் விஜய் ஆனந்த், தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். 'பயணம் என்பது வெறுமனே, ஓரிடம் விட்டு ஓரிடம் செல்வதில்லை. நமக்குள் இருக்கும் ஆயிரம் கதவுகளை திறந்து விடுவதே பயணம்' என்கிறார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். மக்களின் எதார்த்த வாழ்வியலை, நவீனத்துவ பார்வையில் தனித்துவமான கதைகள் எழுதக்கூடியவர். இவர் எழுதிய 'தேசாந்திரி' என்ற இந்த கட்டுரை நுால், பல லட்சம் வாசகர்ளை கவர்ந்த படைப்பாகும். அந்த வாசகர்களின் நானும் ஒருவன். இந்தியா முழுவதும் ஒரு தேசாந்திரியாக இவர், சென்ற பயண அனுபவங்கள்தான் இந்த நுால். இந்த நுாலில், 40 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரை வாசிக்கும் போதும், ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது. அவரது பயண அனுபவங்கள் குறித்து, அந்த நுாலின் முன்னுரையில் கூறும் போது, 'உலகின் முதல் பயணி சூரியனே. அது முடிவில்லாமல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. பயணமே மனிதர்களை மாற்றுகிறது' என்றார்.மேலும் அவர், 'எந்த வசதியும் இல்லாத காலத்திலே, மனிதர்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள். கடல்வழிகளைக் கண்டறிந்திருக்கிறார்கள். நட்சத்திரங்களைத் துணையாகக் கொண்டு நடந்திருக்கிறார்கள்''இன்று எல்லா வசதிகளும் வந்துவிட்டன. ஆனால் பயணம் போகிற மனநிலை பலருக்கும் வாய்க்கவில்லை. என் முடிவற்ற பயணத்தில் நான் கண்ட காட்சிகளை, மனிதர்களை, அனுபவங்களையே இந்தக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன்' என்று பதிவு செய்கிறார்.இவரது பயண அனுபவங்கள் என்பது, ஆடம்பரமாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பயணமல்ல, தன்னந்தனியாக, ஒரு யாசகன் போல் இலக்கு இல்லாமல் சென்ற, பயணங்கள் அவை. அந்த அனுபவங்களை தனக்கே உரிய, அசலான மொழி நடையில் எழுதி இருக்கிறார்.இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று, அந்த இடங்களின் வரலாற்று சிறப்புகள், மனிதர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உணவுப்பழக்கம் ஆகியவற்றை, தானும் அனுபவித்து எழுதி இருக்கிறார்.உதாரணமாக, நல்லதங்காள் கதையில் வரும் கிணற்றைப் பார்க்க, அர்ச்சனாபுரம் சென்ற கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது. நல்லதங்காளின் கதை மட்டுமின்றி, பெண்களின் வேதனைகளையும் மிகவும் அருமையாக பகிர்ந்து இருக்கிறார். அதேபோல், 'கற்றுக் கொடுக்கும் காலம்' என்ற கட்டுரையில் அவர் கயத்தாறு பற்றியும், கட்டபொம்மன் துாக்கிலிடப்பட்ட இடம் பற்றியும், சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார். பயணங்களை ஆவணமாக மாற்றும் வாய்ப்பு, எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எஸ்.ரா.,வுக்கு வாய்த்திருக்கிறது. படிக்காதவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று, அந்த இடங்களின் வரலாற்று சிறப்புகள், மனிதர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உணவுப்பழக்கம் ஆகியவற்றை, தானும் அனுபவித்து எழுதி இருக்கிறார்.உதாரணமாக, நல்லதங்காள் கதையில் வரும் கிணற்றைப் பார்க்க, அர்ச்சனாபுரம் சென்ற கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது.