| ADDED : ஜூலை 27, 2025 07:20 AM
உ லக அளவில் தமிழ் மொழியை வளர்க்கும் ஆர்வலர்கள் பலர் இருப்பதால் தான் இன்றும் தமிழ் இளமையாக ஆட்சி செய்கிறது எனலாம். அந்த வகையில் இலங்கையில் பிறந்து தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால், பிரான்சில் பிற மொழி கலக்காத தமிழ் வானொலியை நடத்தி வருகிறார் சரவணையூர் விசு செல்வராஜ். உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் துணைத் தலைவராக உள்ள இவர், சமீபத்தில் மதுரை வந்திருந்த போது தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்... பிறந்தது, இலங்கை யாழ்பாணம் தீவு சரவணையூர். அங்கேயே பள்ளி, கல்லுாரி படிப்பும் முடிந்தது. இலங்கை அரசு பதவியில் 1980 வரை பணியாற்றினேன். நன்றாக பொருள் ஈட்டும் நோக்கத்தில் வேலை தேடி பிரான்ஸ் சென்றேன். என் 16 வயதிலேயே கலைப் பயணம் துவங்கியது. அப்போதே 'அவள் ஓடி விட்டாள்' என்ற நாடகத்தை இலங்கை யாழ்பாணத்தில் அரங்கேற்றிய அனுபவம் உள்ளது. தாய் நாட்டில் இருந்த காலத்தில் கவிதை எழுதும் ஆர்வமும் சேர்ந்துகொண்டது. பிரபல பத்திரிகைகளில் அப்போதே என் கவிதை வெளியானது. இதனால் கவிஞர் 'பட்டமும்' பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. இந்நிலையில் 1980களில் எனது பிரான்ஸ் பயணம் நிகழ்ந்தது. 2 ஆண்டுகளில் திரும்பி விட நினைத்து சென்றேன். ஆனால் அந்த நாட்டின் பழக்கவழக்கம், பண்பாடு பிடித்துவிட அங்கேயே வாழ்க்கை பயணம் தொடர்ந்தது. திருமணமும் நடந்தது. பிரெஞ்ச் ரயில்வேயில் 1981ல் பணி கிடைத்தது. 36 ஆண்டுகள் பணியாற்றி 540 ரயில்களை இயக்கும் ஒரு பகுதிக்கு உயர் அதிகாரியாக இருந்த பெருமையான தருணமும் நிகழ்ந்தது. 1981ல் ஐரோப்பாவில் முதன்முறையாக ஒலித்த தமிழ் வாகினி என்ற பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக பொழுதுபோக்கிற்காக சேர்ந்தேன். இதை ஆரம்பித்தவர் ரீயூனியன் நாட்டை சேர்ந்த தேவகுமாரன். பொருளாதார சிக்கலால் அந்த வானொலி ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. அப்போது இருந்து வானொலியை ஆரம்பிக்க நினைத்தேன். அது ஈடேற அதிக நாட்கள் ஆகின. 1996ல் கனடா, ஐரோப்பாவில் 'ரேடியோ ஏசியா' என்ற பெயரில் வானொலி ஆரம்பித்தேன். தமிழுக்காக, சர்வதேச தமிழ் வானொலியாக மாறிய இதனை இன்றுவரை நடத்தி வருகிறேன். மொழி ஆர்வத்தால் பலரை ஒன்றிணைத்து 'உலகத் தமிழ் ஒன்றியம்' என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் உலகில் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களை ஒருங்கிணைத்து தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளை முன்னெடுத்துச் செல்கிறேன். தமிழகத்திற்கு 1986ல் முதன்முறையாக வந்தபோது என்னை இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றவர் எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். அந்த காலத்தில் 'கவிதை உறவு' அமைப்பு மூலம் 'செந்தமிழ்ச் செம்மல்' பட்டத்தை ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் அகில இந்திய எழுத்தாளர் சங்க தலைவர் விக்ரமன் வழங்கினார். வாழ்வில் கிடைத்த முதல்பட்டம் அது. 1986 முதல் தமிழகத்தில் இருந்து திரைநட்சத்திரங்கள், இலக்கிய வாதிகளை அழைத்து பாரிசில் ஏராள தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். வானொலி நிகழ்ச்சிகள் 24 மணிநேரமும் இருந்தது. 12 மணிநேரம் ஐரோப்பா, 12 மணிநேரம் கனடாவிலும் தொடர் நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பப்பட்டன. பக்தி பாடல், இலக்கிய சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம், சினிமா நிகழ்ச்சிகள் நேயர்களின் வரவேற்பை பெற்றன. சொந்த பணத்தில் தான் இதுவரை இந்த தமிழ் வானொலியை நடத்துகிறேன். சிற்றலை பண்பலை நடத்தியபோது பொருட்செலவு ஏற்பட்டது. நேயரிடம் பணம் பெறவில்லை. அம்மா பூமணி பெயரில் அறக்கட்டளை துவங்கியுள்ளேன். இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன். வானொலி நேயர்களுக்கும் உதவுகிறோம். கல்வி உதவிக்கு முதலிடம் கொடுக்கிறோம். இலங்கையில் வெள்ள பாதிப்பின்போது உதவிக் கரம் நீட்டியுள்ளோம். ஏராளமான பள்ளிகளை புனரமைப்பு செய்து கற்றல் உபகரணங்கள் வழங்குகிறோம். யாழ்பாணத்தில் கடந்தாண்டு வானொலியின் 28 வது ஆண்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக தமிழக அரசு 25 கலைஞர்களை அனுப்பியிருந்தது. சர்வதேச தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளரான மதுரை காமராஜ் பல்கலை தமிழ்த்துறை தலைவர் சத்தியமூர்த்தி இதற்காக ஏற்பாடு செய்து உதவினார். பாரம்பரிய நடனங்கள் அரங்கேறின. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது மாநாடு பாரிசில் எனது தலைமையில் நடந்தது. இன்றும் என்னால் ஆன தமிழ்ப் பணிகளை தொடர்கிறேன்.