உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / மவுனம் தான் சிறந்த மொழி இறைவனுடன் பேசலாம் இதன் வழி!

மவுனம் தான் சிறந்த மொழி இறைவனுடன் பேசலாம் இதன் வழி!

வ ரும் அக்., மாதம் வந்தால், வயது 90. ஆனாலும், கேள்விக்குறியாய் வளையவில்லை முதுகு. ஆச்சரியக்குறியாய் நிமிர்ந்தே நிற்கிறார் வெள்ளிங்கிரி. காரமடை திம்மம்பாளையத்தை சேர்ந்த இவர். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், வீட்டில் திட்டுவார்களே என்று எண்ணி, ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டு கோவை வந்தார். போலீஸ் துறையில் காவலர் பணியிடத்துக்கு தேர்வு நடந்த சமயம் அது. முதல் முயற்சியிலேயே தேர்வு பெற்றார். பத்து மாத பயிற்சிக்கு பின், ஆயுதப்படை காவலர், தலைமை காவலர் என இருந்த போது, அந்த வாய்ப்பு' கதவை தட்டியது. மத்திய புலன் விசாரணை இலாகாவுக்கு, டெபுடேஷன் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கிறீர்களா என்று, அப்போதிருந்த எஸ்.பி., டயாஸ் கேட்க, இவரும் ஆமோதிக்க, டில்லியில் கிடைத்தது பணி வாய்ப்பு. அங்கிருந்து அவரது க்ராப்' அப்படியே ஏறியது. அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என, ஒவ்வொரு படியாக பயணிக்க ஆரம்பித்தார். இப்பதவிகளில் 18 மாநிலங்களில் பணிபுரிந்தது, வாழ்க்கையின் பல பல பாடங்களை கற்க உதவியது.இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து 13 வருடங்கள் கழித்து, டி.எஸ்.பி.,யாக உயர்ந்ததால், டில்லியில் இருந்து மும்பையில் பணிபுரிய ஆரம்பித்தார். பணிபுரிந்த காலத்தில், ஜனாதிபதியின் பதக்கம் உட்பட 294 பதக்கங்கள், வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன. 1994ல் பணி ஓய்வு பெற்றும், வாழ்க்கையில் மட்டும் தேடுதல் இருந்துக் கொண்டே இருந்தது. ''தேடுதலில் சற்று இளைப்பாறிய இடம், ஆழியாறு, வேதாத்ரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவில். அங்கே தான் வாழ்க்கையில் ஒரு புது வெளிச்சம். புது அத்தியாயம். புது மனிதன் எல்லாம் பரிச்சயமானது. உடல் நலம், உயிர் நலம், மனநலம் இவை தான் அமைதியான வாழ்க்கைக்கு முக்கியம் என கற்றுக்கொண்ட இடம் அது,'' ''மனது சரியாக இருந்தால், 90 சதவீத நோய்களை தடுக்கலாம். எல்லாம் கிடைக்கக் கூடிய சூழல் இருந்தாலும், ஆரோக்கியம் மட்டுமே சொத்து. அதை இழந்து விட்டு தேட முடியாது. நமக்குள் இருக்கும் ஒரு நபரை, அடையாளம் காட்டியது, யோகா, தியானம். அவரிடம் நீங்கள் பேச, இந்த பயிற்சியில் சில காலம் பிடிக்கும். சில நேரங்களில் மவுனம் தான் சிறந்த மொழி. அது தான் இறைவனிடம் பேசும் மொழி,''

'இளைஞர்கள் யோசித்து பேச வேண்டும்'

இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ''இன்று, இளைஞர்கள் பலரை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இவர்களிடம் தானே, நாளையசமுதாயம் இருக்கிறது. ஒரு கோடியில் ஏழு பூஜ்ஜியங்கள் இருந்தாலும், அதன் முன்னால் ஒன்று இருந்தால் தானே, கோடிக்கே மதிப்பு. எந்த இடத்தில் பேச வேண்டும்; எந்த இடத்தில் பேசக் கூடாது. யோசித்து பேச வேண்டும்; யோசிப்பதை எல்லாம் பேசக் கூடாது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். நிறைய பள்ளிகள், கல்லுாரிகளில் இதுகுறித்து பேசியுள்ளேன். காது கொடுக்கும் மாணவர்கள், மனதுக்குள்ளும் வைத்து நடந்தால், அவர்களின் பாதையில் மலர்கள் ஆராதிக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை