உள்ளூர் செய்திகள்

ஸ்காட்லாந்து அபெர்டீன்வாழ் தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா

தமிழரின் விழாவான தைத்திருநாள் விழா ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் மாநகரில் நூற்றுக்கணக்கான மக்களுடன் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட நகரின் Depute Provost -Mr.Steve Delaney , Councillor Miss.Deena Tissera மற்றும் நகரின் மூத்த தமிழ் உறுப்பினர்களின் மங்கல விளக்கேற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது. விழாவில் சிறப்பு விருந்தினர்கள், மூத்த தமிழ் உறுப்பினர்களின் உரைகளுடன், அபெர்டீன் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனம், தமிழ்மொழி வாழ்த்துப்பாடல், மங்கல இசைக் கச்சேரி, உரையாடலும், இவற்றுடன் பரதஸ்ரீ கலைக்கூட மாணவர்களின் கும்மி நடனம், சப்த ஸ்வரங்கள் இசைப்பள்ளியின் பாரதியார் பாடல் மற்றும் யுவதிகளின் நடனங்களென தமிழோசைஅரங்கை ஆழ்த்தியது. மன்னர்களாகவும், புலவர்களாகவும் , வீரப்பெண்மணிகளாகவும் மாறுவேடம் தாங்கிய குழந்தைகளின் நிகழ்வானது அனைவரையும் பண்டைய காலத்துக்கு அழைத்துச் சென்ற அந்தக் காட்சி எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இவை மட்டுமல்லாது தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் இளைஞர்களின் பறை இசையுடன் கூடிய சிலம்பாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் மக்களை மேலும் மண்வாசனைக்கு இழுத்துச் சென்றது என்றால் அது மிகையாகாது. ' இன்றைய தலைமுறைக்குச் சமூக வலைத்தளம் வரமா? சாபமா? ' என்ற தலைப்பில் சிறப்பாக வழங்கப்பட்ட பட்டிமன்றமானது அரங்கில் பலத்த கரகோசத்தைப் பெற்றது. விழாவில் அபர்டீன் knight Riders Cricket Club அணியினர் மற்றும் அபர்டீன் இளைஞர்களும் நிகழ்ச்சியின் களப்பணிகளுக்குத் தொண்டாற்றி விழாவைச் சிறப்படைய உதவினர் . தமிழர் பாரம்பரியத்திற்கு அமைவாக விருந்தோம்பலும் இடம்பெற்று இனிதே நிறைவேறிய இவ்விழாவானது, அபெர்டீன் தமிழ் மக்களுக்கு ஒரு கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தியதுடன் அடுத்துவரும் தலைமுறையினருக்கு தமிழரின் பாரம்பரியம், கலாசாரம் , வரலாறு , கலைகள் பலவற்றையும் எடுத்துக் கூறும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்