உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலன் எழுதிய உருக்கமான கவிதை

இறந்த மகள் தூரிகை பற்றி பாடலாசிரியர் கபிலன் எழுதிய உருக்கமான கவிதை

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் கபிலன். தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். இவரது 27 வயது மகள் தூரிகை சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தியது. அதையடுத்து நடந்த விசாரணையில் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததால் அவர் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தனது மகள் குறித்து கவிதை ஒன்று எழுதி இருக்கிறார் கபிலன். அதில்,

‛‛எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டாள் நான் எப்படி தூங்குவேன்.

எங்கே போனாள் என்று தெரியவில்லை. அவள் காலணி மட்டும் என் வாசலில்.

மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா?

அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்.

அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது. அவளே என் கடவுள்.

குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி.
யாரிடம் பேசுவதுஎல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.

கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு.
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்''

இவ்வாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !