உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ்

தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலத்தை தலைமையிடமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தது. இதன் நிறுவனர் டி.வி.சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் சினிமாவில் பல நவீன விஷயங்களை கொண்டு வந்தவர். அவரே பல படங்களை இயக்கவும் செய்திருக்கிறார், நடிக்கவும் செய்திருக்கிறார்.

இன்றைக்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறு பட்ஜெட் படங்களுக்கு தனி தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. இதன் முன்னோடி டி.வி.சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் பிரமாண்ட படங்களை தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் 'டி.வி.எஸ் புரொடக்ஷன்' என்ற தனி நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சிறுபட்ஜெட் படங்களை தயாரித்தார்.

இந்த நிறுவனம் லாப நோக்கத்தை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு நல்ல படங்களை தர வேண்டும் என்பதற்காக தொடங்கப்படுவதாக அப்போது அவர் சொன்னார். அதன்படி முதல் படமாக ஷேக்ஸ்பியரின் 'அஸ் யூ லைக் இட்' என்ற படத்தை 'சொல்லு தம்பி சொல்லு' என்ற பெயரில் தயாரித்தார். இதில் பிரேம் நசீர், ராஜசுலோச்சனா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். சுந்தரமே இயக்கினார். சில படங்களை தயாரித்த நிலையில் என்ன காரணத்தாலோ பின்னர் இந்த நிறுவனத்தை மூடிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !