உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் தியேட்டர் வாங்கிய நயன்தாரா?

சென்னையில் தியேட்டர் வாங்கிய நயன்தாரா?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை மணந்து, இரண்டு குழந்தைகளுக்கத் தாயாகி சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார்.

அவரும் கணவரும் சேர்ந்து படத் தயாரிப்பு கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்து படங்களைத் தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்து மூடப்பட்ட அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா வாங்கி உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.

அந்தத் தியேட்டர் இருந்த இடத்தில் புதிதாக இரண்டு தியேட்டர்களைக் கட்டவும் அவர் முடிவு செய்துள்ளாராம். அடுத்த வருடம் தியேட்டர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சினிமாவில் அறிமுகமாகி, சினிமா இயக்குனரை மணந்து, சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, தற்போது தியேட்டரையும் வாங்கியுள்ள நயன்தாராவுக்கு திரையுலகினரின் பாராட்டு வந்து சேரும். நயன்தாரா ஏற்கெனவே 'சாய் வாலே' என்ற டீக்கடை வியாபாரத்தில் பெரும் முதலீடு செய்துள்ளார்.

சென்னையில் இதற்கு முன்பு நடிகர் சிவாஜி கணேசன், நாகேஷ், ஜெயப்பிரதா உள்ளிட்டோர் சொந்தமாக தியேட்டர்களை நிர்வகித்து பின்பு அதை விற்றுவிட்டனர். நடிகர் விஜய் விருகம்பாக்கம் நேஷனல் தியேட்டரை வாங்கி அந்த இடத்தில் தியேட்டர்களுடன் கூடிய சந்திரா மால் என காம்ப்ளக்ஸ் கட்டினார். தயாரிப்பாளர் கேஈ ஞானவேல் ராஜா, சென்னை, பாடி பகுதியில் இருந்த ராதா தியேட்டரை வாங்கி பின்பு அதை கிரீன் சினிமாஸ் என்ற பெயரில் இரண்டு தியேட்டர்களைக் கட்டி நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !