தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணிக்கு தடை
தெலுங்கு சினிமாவில் குணசித்ரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறவர் கராத்தே கல்யாணி. சமூக வலைத்தளங்கில் பிசியாக உள்ள கல்யாணி அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு கிளப்புவார்.
ஆந்திர மாநிலம் கம்மத்தில் என்டிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் சிலை அமைக்கப்படுகிறது. இதை கடுமையாக விமர்சித்துள்ள கராத்தே கல்யாணி என்டிஆர் சிலையை நிஜ உருவத்தில் அமைக்க வேண்டும். கடவுள் உருவத்தில் அமைப்பது, அதுவும் குறிப்பாக கிருஷ்ணர் உருவத்தில் அமைப்பது யாதவ சமுதாயத்தை அவமதிப்பதாகும், மீறி அமைக்கப்பட்டால் சிலை உடைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கம் கல்யாணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கல்யாணி பதில் அளித்திருந்தார். அந்த பதிலை ஏற்காத நடிகர் சங்கம், அவரை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது. இதனை சங்க பொதுச் செயலாளர் ரவிபாபு அறிவித்துள்ளார்.