280 தியேட்டர்களில் வெளியாகும் நாயகன்
 மணிரத்னம் இயக்கத்தில் 1987ம்ஆண்டு வெளியான படம் நாயகன். சரண்யா இந்தப் படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்திருந்தனர். தாராவி பகுதியில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த வேலு நாயக்கர் என்ற தாதாவாக கமல் நடித்திருந்தார். இளம் பருவம், நடுத்தர பருவம், முதிய பருவம் என 3  தோற்றங்களில் நடித்திருந்தார். 
இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். பி.சி.ஸ்ரீராம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றார். சிறந்த கலை இயக்குனருக்கான விருதை தோட்டாதரணி பெற்றார். இந்தப் படம் வருகிற நவம்பர் 3ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது.
இதனை ஏடிஎம் புரொடக்ஷன் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. இது தொடர்பாக படத்தை வெளியிடும் மதுராஜ் கூறும்போது, “பிலிமில் எடுக்கப்பட்ட 'நாயகன்' படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியுள்ளோம். ஆடியோ, வண்ணம் ஆகியவையும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 120 திரையரங்குகளிலும், கேரளாவில் 60 திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 50 திரையரங்குகளிலும் வெளியிடுகிறோம். பிற ஊர்கள் என மொத்தம் 280 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம். ஏற்கெனவே நாங்கள் வெளியிட்ட 'வேட்டையாடு விளையாடு' படம் 3 வாரங்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது” என்றார்.