மீண்டும் ஷாரூக்கானை இயக்கும் அட்லி?
தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் 1125 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை செய்திருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்த போதும் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ஜவான் படம் ஷாரூக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதை அடுத்து மீண்டும் ஷாரூக்கானும், அட்லியும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஷாரூக்கான் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும், மீண்டும் அவரை அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது.