சோசியல் மீடியாவில் இருந்து தற்காலிகமாக விலகிய இயக்குனர் ரத்னகுமார்
மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர் ரத்னகுமார். அதையடுத்து மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டபோது, ‛‛எவ்வளவு உயர பறந்தாலும் பசிச்சா கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும்'' என்று பேசி இருந்தார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை பேசியிருந்தார் ரஜினி. இதுபற்றிய சர்ச்சை ஓடிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிண்டலாக ரத்னகுமார் பேசியதாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான குரல்கள் எழுந்தன.
இப்படியான நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ரத்னகுமார் வெளியிட்டுள்ள பதிவில், சமூக வலைதளங்களில் இருந்து விலகப் போகிறேன். என்னுடைய அடுத்த படம் அறிவிப்பு வரும் வரை ஆப்லைன் செல்கிறேன் என்று அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
ரத்னகுமார் நேற்று பேசியதற்கு எதிராக எதிர் விளைவுகள் தொடர்ந்து வரும் என்பதால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.