11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் விஜய் ஆதிராஜ்
சின்னத்திரை நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருக்கும் விஜய் ஆதிராஜ் 2013ம் ஆண்டு புத்தகம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்த படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்தார். தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக தமிழுக்கு வந்தார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு விஜய் ஆதிராஜ் படம் இயக்கவில்லை. சின்னத்திரைக்கே திரும்பினார்.
இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குகிறார். படத்தின் டைட்டில் 'நொடிக்கு நொடி'. இதில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் ஆகியோர் நடிக்கிறார்கள். நாக்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ஆரோக்கியதாஸ் தயாரிக்கிறார். அம்ரேஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து விஜய் ஆதிராஜ் கூறும்போது, ''பரபரப்பான களத்தில் ஜனரஞ்சகமான ஆக்ஷன் பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். புதுமுக நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கி செப்டம்பர் மாதம் முடித்து திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம்'' என்றார்.