பவதாரிணியின் கடைசி பாடல் வெளியானது
இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி. 'மைடியர் குட்டிசாத்தான்' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். 'பாரதி' படத்தில் பாடிய 'மயில் போல பொண்ணு' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பவதாரிணி மித்ரு மை பிரண்ட், அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி தனது 47வது வயதில் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் அவர் சினிமாவுக்காக பாடிய கடைசி பாடல் நேற்று வெளியானது. 'ஆர்யமாலா' என்ற படத்தில் அவர் மரணம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு 'அத்திப்பூவ போல' என்ற பாடலை பாடி உள்ளார். அதனை படக்குழுவினர் அவர் பாடும் வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலுக்கு செல்வநம்பி இசை அமைத்துள்ளார். ஆதிரை எழுதியுள்ளார். படத்தை எஸ்.பி.ஆர் சினிமா சார்பில் சுதாரா ஜேஸ்வரி தயாரித்துள்ளார். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேம்ஸ்யுவன் இயக்கி உள்ளார். மனிஷா ஜித்துடன் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.